Post Top Ad

12:44 AM

இணையத்தில் அரசியல்

by , in
இணையம் என்பது கேள்விகள் இன்றி விடைகள் கிடைக்கும் தொழில்நுட்ப வாய்ப்பாகும். அதன் காரணமாகவே தகவல் சேகரிப்பதற்கு மேலதிகமாக வேறுபல நோக்கங்களை நிறைவேற்ற இணையத்தினுள் நுழைகின்றார்கள். மனிதன் இன்னுமொரு மனிதனின் வேட்கையை(desire) இது
தான் என தானாகவே அடையாளம் கண்டு அந்த வேட்கை கதாபாத்திரத்தை தானே ஏற்று நடிக்கும் போது வெளிப்படும் ஆள் வேடத்தை நெறிபிறழ்வு (pervert) என்றே நாம் அடையாளபடுத்த வேண்டும். இவ்வாறானவர்களின் மனோபாவத்தை விளங்கி கொள்ள  தேவையான சில அடிப்படை இயல்புகளை கீழே தருகின்றேன். 

01. சமூகத்தில் நிலைபடுத்தப்பட்டிருக்கும் பொது நெறிமுறைகளின் (சனநாயகம், இனம், ஒழுக்கம், நற்சொற்கள்......) காப்பாளனாக தன்னை உருவகித்து கொள்ளல். சமூகத்தில் வாழும் ஏனைய பெரியவர்கள் சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்வதால், அவர்களுக்கு சண்டைபிடிக்க எதிரிகளை உருவாக்கி கொடுத்தல்.

02. பழைய நெறிபிறழ்வாளர்கள் வரம்பு மீறிய செயல்கள் மூலம் வினோதமடைந்தார்கள். பழைய கால நெறிபிறழ்வாளர்கள் குறுக்கு ஒழுங்கைகளில் தனியாக வரும் பெண்களை கண்டால் வேட்டியை தூக்கி காட்டி வினோதமடைந்தார்கள். ஆனால் சமகால நெறிபிறழ்வாளர்கள் சமூகத்தில் தமக்கேயான சட்டத்தை நடைமுறையாக்கின்றார்கள். அவர்கள் சட்டத்தை மீறுபவர்களாக இருப்பதோடு அச்சட்டத்திற்கு பதிலாக சட்டமொன்றை(தனிப்பட்ட) புதிதாக அறிமுகபடுத்துகின்றார்கள்.

03. சாதாரண மனிதர்கள் இரகசியமாக செய்பவற்றை நெறிபிறழ்வாளர்கள் வெளிபடையாக செய்வசூதோடு, அவர்கள் வெளிபடையாக செய்பவற்றை நெறிபிறழ்வாளர்கள் இரகசியமாக செய்கின்றார்கள். 

9:23 PM

அமெரிக்காவை ஆட்சி செய்வது யார் ?

by , in
அநேகமான தமிழ் இணையத் தளங்கள் அமெரிக்க அரசாங்கம் ஸ்தம்பிம்பித்தது தொடர்பான செய்திகளை பரபரப்பாக வெளியிட்டடிருந்தன. ஆனால் அதற்கான காரணங்களை அவர்கள் வெளியிடவில்லை. சிறிலங்காவை போலவே
அமெரிக்காவிலும் வெவ்வேறு வர்த்தக பெரும்புள்ளிகள் குறிப்பிட்டளவு உறுப்பினர்களை பாரளுமன்றத்திற்கு அனுப்புகின்றார்கள். இம்முறை அமெரிக்காவின் பெடரல் வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தனியார் காப்புறுதி நிறுவனங்களின் நிதியில் தேர்தல் வெற்றிகளை பெற்றுகொண்டவர்களே ஆகும்.இவர்களின் நோக்கம் அமெரிக்காவின் வறிய மக்களை உள்வாங்கும் தேசிய சுகாதார காப்புறுதி திட்டம் செயற்படுத்தபடுவதை தமாதமாக்குவதாகும். 

சில முட்டாள்களுக்கு ஏற்ற வகையில் இவ்விதம் நாட்டை ஆட்சி செய்பவர்கள் வேறுயாருமல்ல, சனநாயக முறையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட் மக்கள் பிரதிநிதிகள் ஆவர். அந்த மக்கள் பிரதிநிதிகளை வழிநடத்துபவர்கள் வர்த்தக பெரும் புள்ளிகளாகும். இந்த வெள்ளை நிற தோல் கொண்டவர்களை தெரிவு செய்வது வீடுகளில் தொடர்நாடகம் பார்க்கும் மத்தியவகுப்பு பெண்களாக இருக்கலாம், ஆனால் இந்த வெள்ளை நிற தோல்காரர்களை முதலாவதாக இவர்களுக்கு தெரிவு செய்து தருவது வர்த்தக பெரும் புள்ளிகளாவர். இதேபோல் சிறிலங்காவில்  மக்கள் உண்மையாக மகிந்த சிந்தனைகளுக்கு அடிவருடிகளாகவில்லை, மகிந்த சிந்தனையை வழிநடத்தும் மூலதன உரிமையை கொண்ட வியாபாரிகளுக்கே அடிவருடிகளாகியுள்ளனர், ஆனால் இது எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், வாக்களிக்கும் போது மறந்து விடுவதே (நாம் செயல்பாட்டிற்கு வரும் இடத்தில்) பிரச்சினைக்குரியதாகும். பொதுமக்கள் அரசில் செய்வதற்கு நிதி உதவி அளிப்பதில்லை என்பதால், அது வியாபாரிகளிடமிருந்து பெறப்படுகிறது.

1:49 AM

PB பொருளாதாரம் - வரியும் மறைமுக (கொள்ளை) வரியும்

by , in
சிறிலங்காவின் வரவு – செலவு திட்டம் சமர்பிக்கப்பட்டு விட்டது. மீண்டும் அனைவரும் தலையை பீய்த்து கொள்ளும் காலம் வந்தும் விட்டது. அத்தியாவசிய பொருட்கள் முதல்
கொண்டு ஆடம்பர பொருட்கள் வரை ( மகிந்தவின் புதல்வர்கள் பயன்படுத்தும் பொருட்களை தவிர்த்து) அனைத்தினதும் விலை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சேவைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இவ்வாறு விலை அதிகரிப்பதன் காரணத்தை யாராலும் இலகுவாக விளங்கபடுத்த முடிவதில்லை. பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பொருளாதார விமர்சகர்களும் திணறி கொண்டிருக்கும் அதே வேளை முதல்முறையாக தேசிய ஆதன வரிகள் ஆணையகத்தின் ஆணையாளரும் குழம்பி நிற்கின்றார். இந்த நெருக்கடியின் உண்மையான காரணம்; நிதி அமைச்சின் செயலாளர் PB ஜெயசுந்தரவிற்கு மாத்திரமே வெளிச்சம். சிறிலங்காவில் தற்போது நடைமுறையில் இருக்கும் பொருளாதார முறையை கொண்டுசெல்லும் தத்துவாசிரியர் இவர் தான் என்பதை பலர் ஏற்றுக்கொள்வதில்லை.

ஜே. ஆர் யின் ஆட்சிக்கு பின் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நால்வரும் தராளமய முதலாளித்துவ பொருளாதார கொள்கையையே முன்னெடுத்தனர். 80 களின் நடுபகுதியிலேயே முன்பிருந்த வெகுசன நலன்புரி அரசை நாசம் செய்து , தராளமய பொருளாதாரத்திற்கான பருப்பொருளியல் நிலைமைகளை உருவாக்கியவர் ஜயவர்தன ஆவார். அதற்கான அடிப்படை மூலோபாயங்களை உருவாக்கியது சர்வதேச நாணய நிதியமே ஆகும். 
தனவந்தர்களிடமிருந்து வசூலிக்கும் வருமான வரியை படிபடியாக குறைத்து முழு சமூக பொருளாதாரத்திற்கும் உரித்தான மறைமுக (கொள்ளை) வரி முறையை (படிபடியாக அதிகரிக்கும் வகையில்) அறிமுகபடுத்தி அரசினதும் நலன்புரிசேவைகளுக்குமான செலவீனங்களை பொதுமக்கள் மீது சமமாக சுமத்தி, தனவந்தர்களின் 'மூலதனத்தை' பாதுகாப்பதே சர்வதேச நாணயநிதியம் படிபடியாக நடைமுறைபடுத்திவரும் பருப்பொருளியல் கோட்பாடாகும். இதன் மூலம் தனவந்தர்களிடம் சேரும் மூலதனம் மீண்டும் முதலீடு செய்யபடும் என்பதும் அதனால் பொருளாதாரம் முன்னேற்றமடையும் என்பதுவுமே இதற்கான நியாயப்படுத்தல் ஆகும். அல்லது இதனையே நியதிகளாக கொண்டுள்ளனர் பொருளாதார கொள்கை வகுப்பாளர்கள். இதனை PB ஜெயசுந்தரவும் நடைமுறைக்கு கொண்டுவருகிறார். இன்று நடைமுறையில் இருக்கும் பொருளாதார கொள்கையை Pடீ பொருளாதாரம் என்றதற்கு இதுவே காரணம்.

ஆனால் நடப்பதோ வேறு....

சமூகத்திற்காக வறியவர்கள் செலவிட வேண்டிய தொகை மேலும் மேலும் அதிகரிக்கின்றது. இது வறியவர்களை மேலும் மேலும் வரியவர்களாக்கும் விடயமாகும். மறைமுக (கொள்ளை)  வரி என்பது வறியவர்களுக்காக அரசு செலவு செய்யும் தொகையை அவர்களிடமிருந்தே அறவிடும் தேசபற்று முறைமையாகும். வடமகாண சபை என்ன, தமீழீழ சுயாட்சி வழங்கப்பட்டாலும் முதலாளித்துவ அரசுக்களால் இந்த கொள்கை தான் நடைமுறைபடுத்தப்படும்.

தனவந்தர்களுக்கு வருமானமாக கிடைக்கும் தொகை பெரியது என்பதாலும் அதனுடன் ஒப்பிடும் போது அறவிடப்படும் வருமான வரி மிக குறைவு என்பதாலும் அவர்களுக்கு கிடைக்கும் வரி சலுகைகள் மற்றும் இன்ன பிற சலுகைகளினாலும் அவர்களின் நிதி மூலங்கள் மறைக்கப்படுகின்றன. கறுப்பு பணம் உருவாவது இந்த யதார்த்த நிலைக்குள் தான்.  இந்த கறுப்பு பணங்கள் நாட்டிற்குள் முதலீடு செய்யப்படுவதற்கு பதிலாக வரி சலுகை கிடைக்கும் வரியிலிருந்து தப்பிக்க கூடிய இடங்களை நோக்கி நகர்த்தப்படுகின்றன. இதனால் முதலீடுகள் குறைவடையும். குறைவடைந்த முதலீடுகளின் காரணமாக அரசிற்கு கடன் வாங்க வேண்டிய நிலையேற்ப்படுகிறது. வாங்கிய கடனை செலுத்த மேலும் மேலும் மறைமுக (கொள்ளை) வரி அதிகரிக்கப்படுகிறது. இந்த பொருளாதார நிலைமையில் வருமானம் குறைவடைவதோடு வேலையின்மையும் அதிகரிக்கின்றது. பருப்பொருளியல் திட்டமிடலில் எதிர்;பார்க்கப்பட்ட அனுமானங்கள் பிழையானதாகும். இந்த பிழையான அனுமானங்களினால் சமூகம் அராஜக நிலை நோக்கி செல்லும். குற்றச் செயல்கள அதிகரிக்கும். கொள்ளையும் ஊழலும் அதிகரிக்கும். ஆனால் சிலர் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.


பருப்பொருளியல் விக்கி பீடியா விளக்கம்

பருப்பொருளியல் (Macroeconomics) என்பது, பொருளியலின் ஒரு பிரிவு. இது நாடுசார் அல்லது மண்டலம்சார் பொருளாதாரச் செயற்பாடு, கட்டமைப்பு, நடத்தை ஆகியவற்றுடன் தொடர்புள்ளது.நுண்பொருளியலும், இதுவும் பொருளியலின் இரு பெரும் பிரிவுகளாகும். பருப்பொருளியல், மொத்த உள்நாட்டு உற்பத்தி,வேலையின்மை வீதம்விலைச் சுட்டெண் போன்றவற்றை ஆய்வு செய்வதன் மூலம், முழுப் பொருளாதாரமும் எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள முயல்கிறது. தேசிய வருமானம்விளைவுநுகர்வுவேலையின்மைபணவீக்கம்,சேமிப்புமுதலீடுபன்னாட்டு வணிகம்பன்னாட்டு நிதியம்போன்றவற்றுக்கு இடையிலான தொடர்புகளை விளக்கும் மாதிரிகளை பருப்பொருளியலாளர்கள் உருவாக்குகின்றனர். மாறாக நுண்பொருளியலில், நிறுவனங்கள், நுகர்வோர் போன்ற தனிக் காரணிகளின் செயற்பாடுகளும், எவ்வாறு அவற்றின் நடத்தைகள் குறிப்பிட்ட சந்தையில் காணும் விலைகள், அளவு என்பவற்றைக் கட்டுப்படுத்துகின்றன என்பதும் ஆய்வு செய்யப்படுகின்றது.


5:04 AM

இடது சாரிகள் என்றால் யார்?

by , in
சிறிலங்காவில் அரசியலில் நடவடிக்கைகளில் ஈடுபடும் இடதுசாரிகள் என்று கூறிக்கொள்ளும் இளையவர்கள் பலருக்கு இடதுசாரி என்றால் என்ன என்று தெரிவதில்லை. வரலாற்று கதைகளின் அடிப்படையில் இடதுசாரிகள்  என்ற சொல் 'ஹெகலின் தத்துவஞானத்தை' விமர்த்தவர்களுக்கும், அதனை ஏற்று கொண்டவர்களுக்கும் இடையில் நடந்த விவாதங்;ளினிடையே உருவாகியது.

ஹெகலின் தத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இடதுசாரியானார்கள். மறு பிரிவினர் வலதுசாரிகள் ஆனார்கள். அதன் அர்த்தமானது பெரும்பலானவர்கள் பின்பற்றிய கொள்கையை வழிதொடரலும் அதற்கெதிரான மாற்றத்தை முன்மொழிதலும் ஆகும். உதாரணமாக அநேகமாக மனிதர்கள் உணவு உண்பது வலது கரத்தால் ஆகும். இடதுகையால் உணவு உண்பவர்கன் அபூர்வமாக சிலரே ஆகும். அரசியலை புதிய வடிவில் சிந்தித்தவர்கள் இடதுசாரிகள் ஆனார்கள், பழைமைவாத முறையில் சிந்தித்தவர்கள் வலதுசாரிகள் ஆனார்கள். இடதுசாரிகள் எனப்படுபவர்கள் எப்போதும் சிறுபான்மையினர் தான். 

சிறிலங்காவில் இடதுசாரி என்பதற்கு மூன்று வகையான அர்த்தங்கள் இருக்கின்றன. 

1-மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பான கருத்துக்கள் - அதாவது சமூக மாற்றுத்தை நோக்கமாக கொண்டவர்கள்.

2-மாற்றம் ஏற்படுத்தும் வழி முறையாக மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள். முதலாளித்துவத்தை வீழ்த்தும் விஞ்ஞானமாக மார்க்சியம் இருப்பதே இதற்கு காரணம். இலாபத்தை நோக்கமாக கொண்ட உற்பத்திகள் மாதிரிகள் முதலாளித்துவம் ஆகும்.

3-தனிசொத்துடமை குறித்த விமர்சனம். இங்கு மக்களின் சொத்துக்களுடனான உறவை மாற்றி அமைப்பதன் மூலம் சமூகத்தை மாற்றுவது கருத்தில் கொள்ளப்படுகிறது, இங்கு பொதுமக்களின் கருத்துக்கள் கருத்துக்களுக்கு இடமில்லை. உண்மையில் இது பாசிசவாதமாகும்.

8:57 PM

கார்கில்ஸ் கவனம் ! கவனம் !

by , in
ஒரு முறை சிலாபம் பகுதியிலுள்ள ஊர் ஒன்றிலிருக்கும் கட்சி தோழர்களுக்கு அரசியல் வகுப்பு எடுக்க சென்றிருந்த போது, வகுப்பு முடிந்த பின் ஊரின் மக்கள் சிலருடன் கதைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஊர் பிரதான நகரிலிருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்தது. ஊரில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் கொழும்பில் தொழில் செய்பவர்கள். இவர்கள் கொழும்புக்கு பயணிக்க இருக்கும் ஒரே வழியும் இலகுவானவழியும் புகையிரதம் தான். ஆனால் ஊரிலிருந்து புகையிரத நிலையத்திற்கு வருவதற்கு 5 கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டும். வேலை முடிந்த பின்னும் வீடு செல்ல 5 கிலோமீற்றர் என தினமும் வேலைக்கு செல்பவர்கள் 10 கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டும். அலுவலக பயண நேரங்களில் கொழும்பு பகுதிகளில் புகையிரத பயணம் குறித்து கொழும்பில் வசிப்பவர்களிடம் கேட்டால் தெரியும். இதில் தினமும் 10 கிலோமீற்றர் நடை வேறு என்றால் வாழ்;க்கையே வெறுத்து விடும். அந்த ஊர்காரர்ளுக்கு தொழில் செய்ய வேண்டும் என்றால் கொழும்பு வந்தே ஆகவேண்டும். விவசாயம் செய்வதற்கு கூட வசதிகள் இல்லை. பலவருடங்களுக்கு முன் ஊரிற்கும் புகையிரத நிலையத்திற்கும்  நடைபெற்ற அரச போக்குவரத்து சேவை ஏதோ காரணங்களுக்காக நிறுத்தப்பட்டு விட்டது. அன்றிலிருந்து பேரூந்து சேவையை கோரி 5 வருடங்களுக்கு மேலாக போராடி வந்திருக்கின்றார்கள். போராட்டங்களை வழிநடத்த ஒரு கமிட்டி இருந்தது. விடுமுறை நாட்களில் ஆர்ப்பாட்டம் செய்தல், மகஜர் கையளித்தல், வீதி மறியல் என எல்லா விதமாகவும் போராட்டம் நடத்தியிருக்கின்றார்கள். நான் சென்ற அந்த நாட்களில் பசில் ராசபக்சவின் பொருளாதார அமைச்சின் அலுவலகம் ஒன்று ஊரை அண்மித்த பகுதியில் திறப்பதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அந்த அலுவலகத்தை மையபடுத்தி போராட்டங்களை நடத்த போவதாகவும் கூடிய சீக்கிரம் நெடுநாள் போராட்டத்திற்கு வெற்றி கிடைக்கும் என்றும் ஊர்மக்கள் அன்று என்னிடம் நம்பிக்கையுடன் கூறினார்கள். அவர்களுக்கு வாழ்த்தையும் போராட்டங்களில் முன்னிலை வகித்த நான் அரசியல் வகுப்பு நடத்திய கட்சி தோழர்களுக்கு சில ஆலோசனைகளையும் கூறிவிட்டு திரும்பி விட்டேன். அதன் பிறகு நேரச்சிக்கல் காரணமாக அமைப்பு ரீதியாக எனக்கு அந்த பகுதிகளில் இருந்த பொறுப்புக்களிலிருந்து விடுவிக்கப்பட்டதால், என்ன நடந்தது என்பதை அறிய முடியவில்லை.

சுமார் ஆறு மாதங்களின் பின் புத்தளம் பகுதியில் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக பிரச்சார பயணம் ஒன்றை நடத்தி விட்டு  கொழும்பிற்கு திரும்பி கொண்டிருக்கும் போது, மேலே குறிப்பிட்ட ஊரில் இருக்கும் கட்சி கமிட்டிக்கு வரும் வழியில் கூடங்குளம் அணுஉலை ஆபத்துக்கள் தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றை நடத்தி விட்டு வர முடியுமா என்று கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. பேரூந்து போராட்டத்திற்கு என்ன நடந்தது என்று அறியும் ஆவலில் உடனே சம்மதம் சொல்லி விட்டேன். ஊரிற்குள் செல்லும் போது இரவு 1 மணி இருக்கும்.; உந்துரொளியில் செல்லும் போது புதிதாக பொருத்தபட்டிருந்த இரவு வெளிச்ச மின் கம்பங்களையும், கொழும்பு பகுதிகள் போல் சதுரக்கல் பதிக்கப்பட்ட பாதையையும் காணமுடிந்தது. பேருந்து போராட்டம் ஊர் மக்கள் நினைத்தது போல் வெற்றி பெற்று விட்டது போலும் என எண்ணிக்கொண்டேன். அடுத்த நாள் காலை 7 மணிக்கு கலந்துரையாடலை ஆரம்பித்து முடித்துவிட்டு  எத்தனை மணிக்கு பேருந்து என்று தோழர்களிடம் வினவினேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு சிரித்தார்கள். மேற்கொண்டு விசாரித்த போது, இப்போது எல்லாம் யாரும் போராட வருவதில்லை. நாங்கள் மட்டும் தான் இருக்கின்றோம். போராட்ட கமிட்டியும் இல்லை என்றார்கள். முரண்பாடுகளால் கலைக்கப்பட்டு விட்டதாகவும் கூறினார்கள்.

என்ன நடந்தது என்று தீவிரமாக விசாரித்த போது தான் விடயம் தெரிய வந்தது. பசில் ராசபக்சவின் அலுவலகம் திறக்கப்பட்ட பின் ஊர் மக்கள் அலுவலகத்தில் மனுகொடுத்திருக்கின்றார்கள். ஏற்பாடு செய்கின்றேன் என்று சொல்லி அனுப்பியிருக்கின்றார் ராசபக்ச. நம்பிக்கையுடன் போராட்டங்களை நிறுத்தி வைத்திருக்கின்றார்கள் மக்கள். சில நாட்களின் பின் பொருளாதார அமைச்சின் திட்டத்தின் கீழ் அந்த ஊரிலிருந்து புகையிரத நிலையத்திற்கு அண்மை வரை செல்லும் வகையில் வோக்கிங் ட்ரெக் அமைத்திருக்கின்றார்கள். கொழும்பு பாராளுமன்ற பகுதியில் இருப்பது போல் . இரவில் சதுரக்கல் பதிக்கப்பட்ட பாதை என நான் நினைத்தது இதை தான். வோக்கிங் ட்ரெக் ஊரிற்கு செல்லும் பாதை வழியே அமைக்கப்பட்டதால் வேலை முடியும் வரை பேருந்து பயணிப்பது சிக்கல் என்று கூறப்பட்டிருக்கிறது. வோக்கிங் ட்ரெக் அமைக்கப்பட்டு பசில் ராசபக்சவினால் கோலாகலமாக திறக்கப்பட்டது முதல் ஊர் மக்கள் எல்லோரும் வோக்கிங் ட்ரெக்கில் தினமும் நடை பயிற்சி செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஆண்களும் பெண்களும் நடைபயிற்சிக்கான சப்பாத்து(track shoes), ட்ரெக் பொட்டம் (track bottoms), எம்பி 3 பிளேயர்( mp3 player) , எட்செட் (headset) என மக்கள் ஒரே அமர்களமாகிவிட்டனர்.

முன்பு தினமும் 10 கிலோமீற்றர் நடந்தவர்கள், தற்போது வேலை முடிந்து வந்த பின் தினமும் வோக்கிங் ட்ரெக்கில் 10 கிலோமீற்றர் நடைபயிற்சி வேறு செய்கின்றார்கள். சிலர் காலைவேளையிலே நடைபயிற்சி செய்கின்றார்கள். பேருந்து போராட்டத்தை மறந்து விட்டார்கள். இப்போது அவர்களது எண்ணம் எல்லாம் வாகனம் ஒன்று வாங்குவது தொடர்பாக தான் இருக்கின்றது. சில இளைஞர்கள் ஏதோ வழியில் பைக் வாங்கியும் விட்டார்கள் என்றும் அறிய கிடைத்தது. பேருந்து போராட்டத்தை கைவிட்டு விட்டு மக்கள் சொந்த வாகனம் வாங்கும் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள்.

ஆட்சியாளர்களுக்கு சமூகத்தில் கருத்தியல் ஆதிக்கம் செலுத்தும் விதம் நன்கு தெரிகிறது. ஒரு வோர்க்கிங் ட்ரெக் அமைத்து பேருந்துக்காக 5 வருடங்களுக்கு மேல் போராடிய மக்களை மாற்றி விட்டனர். வோர்க்கிங் ட்ரெக் அமைக்கும் முன் அந்த ஊர் மக்கள் அனைவரும் சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்கள். தற்போதும் அப்படி தான் ஆனால் தினமும் ட்ரெக் பொட்டம் (track bottoms), எம்பி 3 பிளேயர்( mp3 player) , எட்செட் (headset) சகிதம் வோர்க்கிங் போவதால், தாங்கள் தற்போது நடுத்தர வர்க்கத்தினராக மாறிவிட்டதாக எண்ணி கொள்கின்றார்கள். இதன் காரணமாக போராட்ட  உணர்வு மழுங்கடிக்கப்பட்டு விட்டது. நடுத்தர வர்க்கம் என்று எண்ணிக்கொண்டிருப்பதை நிஜமாக்கிட சொந்தமான வாகனம் வாங்கும் போராட்டத்தில் இறங்கி விட்டார்கள். மக்கள் போராடும் போது தீர்வை வழங்கினால் அவர்கள் மேலும் மேலும் போராட்டங்களில் இறங்கிவிடுவார்கள். அதை தடுக்க வேண்டுமென்றால் அதிகாரத்தை பயன்படுத்தி நசுக்கிட வேண்டும். அல்லது இது போன்ற நடவடிக்கைகளால் மக்களின் வர்க்க இயல்பை மாற்றி போராட்ட உணர்வை மழுங்கடிக்க செய்து நுகர்வு கலாசாரத்தை உட்புகுத்தி நுகர்வு பொருட்களை வாங்கிட ஒடிடும் சொந்த போராட்டத்தினுள் மக்களை தள்ளி விடவேண்டும். அப்போது தான் அறிய கிடைத்தது, அந்த ஊர் மக்கள் காலம் காலமாக ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தவர்கள் என்றும் அதன் காரணமாக தான் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது எனவும் தற்போது அவர்களில் பலர் பசில் ராசபக்சவுடன் இணைந்துவிட்டார்கள் என்றும். கடைசியாக நடைபயிற்சி செய்யும் போது ஊர் நாய்கள் தொல்லை தருவதாகவும், சிலவேளை வோர்க்கிங் ட்ரெக்கில் நாய்கள் மலம் கழித்து வைப்பதாகவும் பசிலிடம் ஊர்மக்கள் புகார் கூறியிருக்கின்றார்கள். பசிலும் உடனே நாய் பிடிக்கும் வண்டிகளை அனுப்பி நடவடிக்கை எடுத்திருக்கின்றார்.

இது நடந்து ஒரு வருடம் ஆக போகின்றது. தற்போது யாழ்பாணத்தில் திறக்கப்பட்ட கார்க்கில்சின் படங்களை முகபுத்தகம் வழியே காணநேர்ந்த போது மீளவும் இச்சம்பவம் நினைவிற்கு வந்தது. ஊடகவியளாளர் தியாகராசா நிரோஸ் கார்கில்சை நிராகரிப்போம் என வலியுறுத்தி பிரச்சாரம் செய்யதிடவே, அவருக்கு துணையாக இந்த சம்பவத்தை வழமையான என் நான்கு மணித்தியாள நித்திரை நேரத்தில் ஒரு மணித்தியாலத்தை தியாகம் செய்துவிட்டு எழுதுதியிருக்கின்றேன். யாழ்பாண கார்க்கில்சை இந்த வோர்க்கிங் ட்ரெக் உடன் பொருத்தி பாருங்கள் சில நேரம் ஒரு கார்க்கில்ஸ் என்ன செய்ய போகிறது என்று தோன்றலாம். இது ஆரம்பம் தானே... இன்னும் முதலீட்டு ஊக்குவிப்பு வலயங்கள், கைத்தொழில் வலயங்கள், சர்வதேச விமான நிலையம், அதிவேக பாதை, இன்னும் பல இத்தியாதிகள் வரவிருக்கின்றன. 

10:25 PM

ரயாகரனின் சமஉரிமை கள்ள குதிரை சவாரி

by , in
'வடிவேலு ஒரு படத்தில் நானும் ரவுடி நானும் ரவுடி என்று பொலிஸ் வண்டியில் ஏறுவார்..' அது போல தான் இருக்கின்றன தோழர் ரயயாகரனின் சமஉரிமை தொடர்பான விளக்கங்களும். இது மார்க்சிய அடிப்படையானது என்று நிருபிக்க கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றார் அவர். சமஉரிமை எனும் கோசம் மார்க்சிய அடிப்படையிலானதா? அல்ல சுயநிர்ணயத்தின் அடிப்படையிலானதா? வர்க்கபுரட்சியின் திறவுகோலா என்பதல்ல எனது பிரச்சினை. சமஉரிமை என்ற கோசத்தை முன்வைத்த பல இயக்கங்களை கண்டிருக்கின்றோம். லெனின் வலியுறுத்திய சமஉரிமையையும் அறிந்திருக்கின்றோம்.
3:09 AM

பின்நவீனத்துவ நிலவரங்களும் பின் நவீனவாதமும்

by , in
வடகிழக்கில் புலிகள் இயக்கத்தின் கட்டுபாட்டிலிருந்த, புலிகள் இயக்கத்தின் ஆதிக்கம் நிலவிய பிரேதேசங்களை தவிர்த்து பெருந்தோட்டங்கள் உட்பட்ட நாட்டின் சகல பகுதிகளும் பின் நவீனத்துவ நிலவரங்களின் ஆளுகைக்கு உட்பட்ட அந்நிலவரங்களில் முகிழ்ந்த பகுதிகளாகும்.
9:40 AM

நவீனத்துவமும் சிறிலங்கா சமூகமும்

by , in
நவீனத்துவம் என்றால் என்ன?

ஐரோப்பாவில் தேவாலய ங்களின், மதத்தின் ஆதிக்கத்தில் அகப்பட்டிருந்த மக்கள் புதிய சிந்தனை நோக்கி பயணித்த புதுமலர்ச்சி காலத்திலேயே நவீனத்துவத்தின் ஆரம்ப நிலவரங்கள் கருவுற்றிருக்க வேண்டும். அதுவரை மத நம்பிக்கைகளில் ஆட்கொள்ளப்பட்டிருந்த மனிதன்
12:54 AM

பண்பாட்டு சிறையும் பெண்ணடிமை தனமும்

by , in
முதல் படம் நாய்களுக்கு வாயில் போடும் பட்டியாகும், யரையும் கடிக்க கூடாது, குரைத்து சத்தம் போட கூடாது என்பதற்காக போடப்படுவதாகும். இரண்டாவது படம் சில பழங்குடியினர் பெண்களின் இடுப்பு பகுதியில் அணிவித்த பட்டியாகும்.
11:42 PM

தோழர் ரயாகரனின் சம உரிமை போராட்டம் மீது சில கேள்விகள்?

by , in
முன்னிலை சோசலிச கட்சியினால் உருவாக்கப்பட்ட சம உரிமை இயக்கத்தில் , புதிய சனநாயக மக்கள்; முன்னணியை சேர்ந்தவர்களும் இணைந்து செயற்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. சமஉரிமை இயக்கம் வெளியிட்ட பிரசுரத்திற்கு வெளியே சமஉரிமை இயக்கத்தின் தேவையை வலியுறுத்தி வருபவர்களாக புதிய சனநாயக மக்கள் முன்னனியினர் செயற்பட்டு வருகின்றனர். அதிலும் தோழர் ரயாகரன் சமஉரிமையை வலியுறுத்தி பல கட்டுரைகளை அவரின் கட்சி தளத்திலே வெளியிட்டு வருகின்றார். அதிகமாக தாக்கம் செலுத்தாது ஆயினும் அவரிற்கும் அவரை நம்பி சமஉரிமையை கோட்பாட்டை ஏற்று பிரச்சார படுத்தி வருபவர்களுக்கும் சில விடயங்களை சுட்டிகாட்ட விரும்புகின்றேன்.
6:58 AM

பின் நவீனத்துவ பிரச்சினைக்கான பதில்

by , in
பின்நவீனத்துவம் என்றால் என்ன ? என நான் எழுதிய குறிப்பிற்கு முகபுத்தகத்தில் பின்னூட்டமூடாக எதிர்வினையாற்றியிருந்த தோழர் சிறிரங்கன் அவர்கள் சில கேள்விகளை முன்வைத்து பதிலளிக்குமாரு கோரியிருந்தார். தமிழ் இடதுசாரிகளில் பரந்துபட்ட தேடல் உடையவரான தோழர் சிறிரங்கன் மீது சற்று பொறமை கலந்த மரியாதை எனக்குண்டு. அவரின் கேள்வியில் தொனிபொருளாக இருந்தது சிறிலங்காவின் சமூக போக்கின் வழியே பின்நவீனத்துவம் தேவையற்ற ஒரு கலந்துரையாடல், அதுகுறித்து கண்டுகொள்ள தேவையில்லை என்பதாகும். இதற்கு முன்பும் சில புலமையாளர்கள் இதே கருத்தை கூறியிருக்கின்றார்கள். ஆனால் அவையெல்லாம் சில தப்பிபிழைத்தலிற்காக மேற்கத்தைய மொழிபெயர்ப்பாக திணிக்க முயற்சிக்கப்ட்ட பின்நவீனத்திற்கான எதிர்வினைகளாகும்.
7:08 AM

காணி, பொலிஸ் அதிகாரங்களை சிங்களவர்கள் மறுப்பது ஏன்?

by , in
சிறிலங்காவில் நிலம் மீதான உரிமையானது தனியார் காணிகள், அரச காணிகள் என இரண்டு விதமாக அமைகிறது. இவ்வாறு உரிமை கொண்டாடப்படும் நிலமானது தற்போதைய நிலையில் சிறிலங்காவில் ஆத்மார்த்த ரீதியாக எவ்வித தூய்மை தன்மையும் அற்றது  என்பதை அனைவரும் தெளிவாக அறிவார்கள்.
11:38 AM

பின் நவீனத்துவம் என்றால் என்ன?

by , in
பெட்ரிக் ஜேம்ஸ், ஜென் பிரான்சுவா லியோதார்டா, ஜீன் பட்ரிலார்ட் போன்றவர்கள் பின்நவீனத்துவத்தை வரைவிலக்கன படுத்தியவர்களில் நான் அறிந்த சிலர் ஆவர்.
மார்க்சியவாதியான பெட்ரிக் ஜேம்சன் பின்நவீனத்துவத்தை ஒரு வரலாற்று பரிவர்த்தனை நிகழ்வாக சித்தரிக்கின்றார். அதாவது வரலாற்றின் ஓரு காலகட்டத்தில் இடம்பெற்ற பண்பாட்டு அமைப்பியல் மாற்றமாகும். இந்த மாற்றம் இதற்கு முன்னிருந்த ஒன்றின் முடிவை குறித்து நிற்கிறது. அதன் படி பின் நவீனத்துவம் என்பது கருத்தியலின், கலையின், சமூக வர்க்கங்களின், சமூக சனநாயகத்தின் முடிவாகும். இம் முடிவு நிலைகள் லெனினியம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கான அறிகுறிகளாகும். 
நவீனத்துவம் என்பது மரபுகளுக்கு எதிராக ஒரிடத்தில் தேக்கமடைவதற்கு பதிலாக எல்லையில்லாது விரிவடைந்த எதிர்கால முன்னேற்றம் எனில், பின் நவீனத்துவம் என்பது கடந்தகால துன்பங்களாகும், கடந்தகாலத்திற்கு நன்மை செய்வதாகும். அதாவது பறிபோன ஒன்றின் மீதான மனிதனின் எஞ்சியிருக்கும் பக்தியாகும். உண்மையில் பின் நவீனத்துவம் முதலாளித்துவத்திற்கோ அல்லது சோசலிசத்திற்கோ எதிரான கருத்துடையதல்ல, பின் நவீனத்துவம் முதலாளித்துவத்தின் இறுதி பண்பாட்டு கட்டமைப்பாகும். இதனை எதிர்மறையான வழிகளை  விடுத்து உறுதியான திடமான வழிமுறைகளாலே களைந்திட வேண்டும். 

Post Top Ad

My Instagram