Post Top Ad

8:35 PM

புரட்சிக்காரன் மனசு மென்மையானது !

by , in

1995 ஆம் ஆண்டின் மார்ச் முதலாம் நாள், யாழ் குடாநாட்டில் புலிக்கொடி பறந்த காலம். புலிகளிடம் போர் கைதிகளாக அகப்பட்டிருந்த சிங்கள படையைச் சேர்ந்த 16 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்திருந்தார்கள்.
94 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் தான் சந்திரிக்கா அம்மையார் “சமாதான புறா” என்ற அடைமொழியுடன் சனாதிபதி ஆகியிருந்தார். சந்திரிக்கா சனாதிபதி ஆனதுடன் புலிகளும் தன்னிச்சையாகப் போர் நிறுத்தத்தை அறிவித்தார்கள். இழுத்தடித்து சிங்கள அரசும் போர்நிறுத்த உடன்பாட்டுக்கு வந்தது.
எனினும், தமிழர் பகுதி மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையை நீக்கச் சிங்கள அரசு மறுத்து வந்தது. பொருளாதாரத் தடையை நீக்கினால் உண்ணாவிரதம் இருந்த போர் கைதிகளை விடுவிக்க முடியும் எனப் புலிகள் அறிவித்தார்கள்.
16 பேரும் ஐந்து வருடங்களுக்கு மேலாக போர் கைதிகளாக இருந்தவர்கள். அதுவரையிலும் இரண்டு தடவைகளுக்கு மேல் உண்ணாவிரதமிருந்திருந்தார்கள். 100க்கும் மேற்பட்ட கடிதங்களைச் சிங்கள அரசுக்கு அனுப்பி இருந்தார்கள்.
இருந்த போதும், சிங்கள அரசு அவர்களை விடுவிக்க எந்த முயற்சியும் எடுத்திருக்கவில்லை. சமாதான பேச்சுவார்த்தை நடந்த காலத்தில், அவர்களை விடுவிக்கும் அனைத்து சந்தர்ப்பமும் இருந்தது. எனவே, அவர்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.
சு.ப. தமிழ்செல்வன் போர் கைதிகள் உண்ணாவிரதமிருப்பது அவர்களது உரிமை, அதை நாம் தடுக்கப் போவதில்லை என ஊடகங்களுக்கு அறிவித்தார்.
சொல்லியது போல் 7 நாட்கள் நீர் அருந்தி உண்ணாவிரதமிருந்த போர் கைதிகள் , 8வது நாள் நீர் அருந்துவதையும் தவிர்த்தார்கள்.
உண்ணாவிரதம் தொடர்பான சகல தகவல்களும் அப்போதைய யாழ் அரச அதிபர் க.பொன்னம்பலம் ஊடாக அரசுக்கு அறிவிக்கப்பட்டது. சர்வதேச, உள்ளூர் ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டன.
ஆனாலும், உண்ணாவிரதம் ஆரம்பித்து 8வது நாளில் கூட வெளியுறவு அமைச்சராகவிருந்த லக்ஸ்மன் கதிர்காமர் தனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது எனக் கூறினார்.
உண்ணாவிரதத்தின் 10வது நாள் போர்கைதிகளின் உறவினர்கள் சனாதிபதிக்கு மகஜர் ஒன்றைக் கையளிக்கச் சென்றார்கள். எனினும் அவர்களின் மகஜரைச் சனாதிபதி செயலகம் ஏற்க மறுத்தது.
அதே தினம் அமைச்சராகவிருந்த வாசுதேவ நாணயக்கார, விடுதலை தொடர்பாகத் தான் பேசுவதாகவும், போர் கைதிகள் நீர் அருந்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார். போர்கைதிகள் இதை ஏற்றுக் கொண்டு நீர் அருந்தி உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார்கள்.
உண்ணாவிரதத்தின் 11வது நாள் அரசாங்க தரப்பின் 23 எம்பி கள் தமிழர் பகுதி மீதான எரிபொருள் தடையை நீக்கி போர்கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டாக கடிதம் மூலம் சந்திரிக்கா அம்மையாரிடம் கோரிக்கை முன்வைத்தார்கள்.
11 வது நாள் போர் கைதிகளின் உறவினர்களும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார்கள்.
12 வது நாள் அப்போதைய தேசிய நல்லிணக்க பிரதி அமைச்சராகவிருந்த ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே எரிபொருளுக்கு தடைவிதித்தாலும் அதனால் புலிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை, மக்களுக்குத் தான் பாதிப்பு, எனவே தமிழர் பகுதிக்கான எரிபொருள் தடையை முற்றாக நீக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தார்.
15 வது நாள் போர் கைதிகளின் நிலை மிக மோசமாகியது. பலர் நினைவிழந்து மரணத்தை நெருங்கியிருந்தார்கள். இரண்டு பேர் கோமா நிலைக்குச் சென்றிருந்தார்கள்.
உறவினர்கள் இனி அரசை நம்பி பயன் இல்லை. “உங்கள் உயிர்கள் அங்கு போனால் எங்கள் உயிர்கள் இங்கு போகும்” என அறிவித்தார்கள். பல வெகுசன அமைப்புக்கள் உண்ணாவிரத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார்கள். தென்னிலங்கையிலிருந்த யாழ்ப்பாணம் வந்த ஜெயதேவ உயங்கொட், அங்கிலிக்கன் திருச்சபை ஆயர் கென்னத் பெர்னான்டோ போன்றவர்கள் உண்ணாவிரத்தை கைவிடுமாறு போர் கைதிகளை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தும் அவர்கள் திட்டவட்டமாக மறுத்திருந்தார்கள்.
இதே காலப்பகுதியில் சென்னை மத்திய சிறையிலிருந்து விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்பட்ட 46 கைதிகளும் தம்மை விடுதலை செய்யக் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்தார்கள். வேலூர் சிறையிலிருந்த 6 பேர் தப்பி சென்றிருந்தார்கள்.
16 வது நாள், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் போர் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப் போவதாக அறிவித்திருந்தார். சொல்லியது போல் 16 போர் கைதிகளை அப்போதையராவய பத்திரிக்கையின் ஆசிரியர் விக்டர் ஐவன், சண்டே ஒப்சவர் பத்திரிக்கையின் ஆசிரியர் அஜித் சமரநாயக்க, தாராக்கி சிவராம், தமிழோசை ஆனந்தி, விரிவுரையாளர் ஜெயதேவ உயங்கொட போன்றோர் முன்னிலையில் செஞ்சிலுவைச் சங்கத்திடம் கைதிகள் ஒப்படைக்கப்பட்டார்கள்.
ஒருபக்கம், உண்ணாவிரதமிருந்தவர்கள் செத்து விடுவார்கள் என்ற நிலையிலும் சிறிதும் இரக்கம் காட்டாத சிங்கள பேரினவாத அரசு. இன்னுமொருபுறம் கைதிகளின் உண்ணாவிரதத்தை அடாவடியாகக் கையாண்ட ஜெயலலிதா தமிழ் நாடு மற்றும் இந்திய அரசு.
ஆனால், இடையிலிருந்த புலிகள் அமைப்பு மனிதாபிமானத்தை வெளிக்காட்டிச் சாவை நெருங்கிய உண்ணா விரதிகளை விடுத்திருந்தார்கள்.
போராடுபவர்களுக்கு தான் போராட்டங்களின் வலியும் வேதனையும் தெரியும். ஒடுக்குபவனால் அதை உணர முடியாது. ஒடுக்குபவர்களின் மனம் எப்போதும் கொடூரமானதாகத் தான் இருக்கும். 2012-13 காலப்பகுதியில் வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருந்த அரசியல் கைதி இருவரை அடித்து கொலை செய்தவர்கள் இவர்கள் தான்.
தியாகி திலீபன் நினைவுக் கூறப்படும் ஒவ்வொரு நிமிடமும் இந்த உண்மை சிங்கள பேரினவாத சமூகமும், அவர்களுடன் சேர்ந்தவர்களும் இதை நினைத்து வெட்கம் கொள்ளவே வேண்டும்.
ஏனெனில் மக்களை ஆழமாக நேசிப்பவர்களால் மாத்திரம் தான் மாபெரும் தியாகங்களைச் செய்யவும், போற்றவும் இயலும்.
புரட்சிக்காரர்கள் எப்போதும் சத்திரசிகிச்சையாளர்கள் போன்றவர்கள். பல சமயங்களில் தீவிரமான வேதனை தரும் சிகிச்சைகளைச் செய்பவர்கள். ஆனால், அது அவர்களின் அன்பு மனதின் வெளிப்பாடு .

**************************************************************************************
முகநூல் பதிவு>>>>> https://www.facebook.com/pazlarichard/posts/1486360891556583


2:12 AM

அனுர குமார - அவர்களின் நல்ல வேட்பாளர்!

by , in

அனுரகுமார திசாநாயக்கவை ஆதரிப்பவர்கள் முதலில் கட்டாயமாக சோசலிசம் என்பதை மறந்துவிட வேண்டும். வழமையாக இருவருக்கு இடையிலான போட்டியாக நடைபெறும் சனாதிபதி தேர்தல், இம்முறை மூவருக்கிடையிலான போட்டியாகி இருக்கின்றது.

மூவரும் முதலாளித்துவ பொருளாதாரத்தைச் சீர்திருத்தி நாட்டை அபிவிருத்தி செய்யப் போவதாகச் சொல்கின்றார்கள். ஒவ்வொருவரும் பிரச்சாரத்தில் முன்னுரிமை கொடுக்கும் விடயங்கள் தான் வேறுபடுகின்றது.

இந்த மூன்று வேட்பாளர்களிலும் அனுரகுமார திசாநாயக்கவினதும், அவரது கட்சியினதும் அரசியல் பண்பாடு, நேர்மை, அர்ப்பணிப்பு, நேர்த்தி மிகச் சிறந்ததாகும். அனுரகுமார சனாதிபதியானால் நிச்சியமாக அரச நிர்வாகத்தில் ஊழலும், வீண் விரயமும் தவிர்க்கப்படும், சாதாரண மக்கள் விரும்பும் பல மாற்றங்கள் நிகழும், ஆனால், எதிர்பார்க்கும் பொருளாதார அபிவிருத்தி கிடைக்குமா என்பது சந்தேகமே?

மறுபக்கம் அனுரகுமார சனாதிபதியானால் எல்லோரும் நிறைவேற்று அதிகார சனாதிபதி முறையை ஒழிப்பதுக்கு முண்டியடிப்பார்கள் என்பது மாத்திரம் நிச்சியம்.

அனுரகுமார ஜேவிபி இன் தலைவராவதற்கு அவருக்கிருக்கும் அபார ஞாபக சக்தியும் ஒரு காரணம். ஜேவிபி க்கு புதிய தலைவர் வேண்டும் என்ற பேச்சு எழுந்த போது தோழர் லால்காந்தவும், தோழர் ரில்வின் சில்வாவும் தலைவராகும் எதிர்பார்ப்பிலிருந்தார்கள்.

ஜேவிபி இன் மாணவர் அணி கட்சியில் இருந்து பிரிந்து சென்றிருந்ததால், தொழிற்சங்க பிரிவும், ஆரம்பக்கால உறுப்பினர்களும் தான் பலமான அணியாக இருந்தார்கள். தோழர் லால்காந்த தொழிற்சங்க நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருந்தார். எனவே, தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் லால்காந்த தலைவராக வேண்டும் என விரும்பியிருந்தார்கள். ஆரம்பக்கால உறுப்பினர்கள் நீண்டகாலம் கட்சியின் செயலாளராக இருக்கும் ரில்வின்சில்வாவை தலைவராக்க விரும்பினார்கள்.

ஆனால், ஜேவிபி அரசாங்கம் மீதான விமர்சனங்கள் மூலம் மத்திய தரவர்க்கத்தை ஈர்ப்பதை உபாயமாகத் தேர்ந்தெடுத்திருந்தது. அனுரகுமார இரண்டுக்கும் பொருத்தமானவராக இருந்தார். தலைவரான பின் அனுரவின் உடை அலங்காரங்கள் கூட மத்தியத்தர வர்க்கத்தினரைக் கவரும் வகையில் மாற்றம் கண்டிருப்பது அவரை தொடர்ந்து அவதானித்திருந்தவர்களுக்குத் தெரியும்.

அனுரகுமாரவுக்கு சராசரி மனித ஞாபகசக்தியை விட அதிகமான ஞாபக சக்தி திறன் இயற்கையாகவே இருக்கின்றது. ஏராளமான புள்ளிவிவரங்களை ஞாபகத்தில் வைத்திருக்கக் கூடியவர். அரசாங்கத்தை புள்ளிவிவரங்களுடன் விமர்சிப்பதற்கு அவரின் இந்த திறன் அருமையாகக் கைகொடுத்திருந்தது.

ஜேவிபி எப்போதும் இப்படியான விம்பங்களை உருவாக்கி கட்சியை மக்கள் மத்தியில் கொண்டு செல்வார்கள். ரோகன விஜேவீர அவரின் தோற்றத்தை சேகுவேரா போல் மாற்றிக் கொண்டிருந்தார். விமல் வீரவன்சவின் தாடியை வட்டமாக வெட்டி, தலைமுடியை ஸ்ரேட்டிங் செய்து ஊடகங்களில் கதைக்க வைத்தே கட்சியை வளர்த்தார்கள்.

ஜேவிபி அண்மைக்காலமாகக் கண்டிருக்கும் மாற்றங்கள் குறிப்பிடத்தக்கது. 2011 இல் ஜேவிபி இன் மாணவர் அணி தனியாகப் பிரிந்து செல்ல தீர்மானித்தார்கள். இருதரப்பும் கட்சியுடன் தொடர்பு பட்டவர்களைச் சமரசம் படுத்தி தங்கள் பக்கம் இழுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கினார்கள்.

சுனில் ஹெந்துன்நெத்தி தோழரும், சந்திரசேகரன் தோழரும் பல்கலைக்கழகத்துக்கு வந்து என்னைச் சந்தித்திருந்தார்கள். ஜேவிபியின் சஞ்சிகை ஒன்றில் மாணவர் அணி பக்கம் இருந்த தோழர் உதுல்பிரேமரத்ன ஓரின சேர்க்கையாளர்களின் பிரச்சினைகள் பற்றி எழுதியிருந்த கட்டுரை ஒன்றைக் காட்டி நாம் எங்குச் செல்கின்றோம், இதெல்லாம் எமக்குச் சரிவருமா? இப்படி பிழையாகச் செல்வதைக் கேள்வி கேட்டதால் தான் கட்சியிலிருந்து பிரிந்து செல்கின்றார்கள் என்றார்.

அதே ஜேவிபியும், சுனில் ஹெந்துன் நெத்தியும் இன்று அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்று சொல்லியுள்ளார்கள்.

எல்லாவற்றில் மாறி இருந்தாலும் தேசிய இனப்பிரச்சினையில் இன்னும் மாறவே இல்லை. பௌத்த மதத்துக்கும் சிங்கள தேசியவாதத்துக்கும் முதலிடம் கொடுத்து அனைத்து மக்களும் சமமாக(?) வாழும் இலங்கை தேசியத்தை உருவாக்குவதே தீர்வு என்ற நிலைப்பாட்டிலிருந்து அங்குலம் கூட மாறவில்லை. அதாவது

அவர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கை தேசியம் என்பதின் கீழ், அனைவருக்கும் 1000 ரூபாய் தினக் கூலியை உறுதி செய்வோம் எனச் சொல்லியுள்ளார்கள்.

இவ்வளவு தான் தேசிய இனங்கள் தொடர்பான இவர்களது நிலைப்பாடு. உண்மையில் இனவாதத்தை வெகுசனமய இயக்கமாக்கியதில் ஜேவிபியின் பங்கு முதன்மையானது.

சமாதான ஒப்பந்த காலத்தில் புலிகளுடன் பேச்சுவார்த்தைக் கூடாது, யுத்தம் மூலம் அழிக்க வேண்டும் என்று சிங்கள கிராமம் தோறும் பிரச்சாரம் செய்து மக்களை யுத்தம் நோக்கி தள்ளியவர்கள் ஜேவிபியினர் தான்.

ஏனைய பெரும்பான்மை கட்சிகள் தேர்தலுக்காக, அதிகாரத்துக்காகத் தான் இனவாதத்தைப் பிரச்சாரம் செய்கின்றன. ஆனால், ஜேவிபியினர் தத்துவார்த்த அடிப்படையில் மக்களிடம் இனவாதத்தைப் பரப்புபவர்கள்.

ஆனால், அனுரகுமார சனாதிபதியானால், தமிழர் தரப்பு உண்மையான இனவாத கருத்தியல் வாதிகளுடன் தத்துவார்த்த விவாதத்தை வெகுசன வெளியில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும். தீவிரமான வெகுசன போராட்டங்களை நடத்தக் கூடிய வாய்ப்பும் கிடைக்கும்.

மக்கள் போராட்டங்களை ஜேவியினர் அடக்க நினைத்தால், தென்னிலங்கையிலிருந்தும், ஜேவிக்குள்ளிருந்தும் தமிழர் தரப்புக்கு ஆதரவு கிடைக்கும்.

மேலும், ஜேவிபி ஏனைய கட்சிகள் போல் ஏகாதிபத்தியத்தின் நெருக்குவாரங்களுக்கு அடி பணியாது. எனவே, சர்வதேச ரீதியிலும் அவர்களுக்கு நெருக்குவாரங்கள் அதிகரிக்கும். எனவே, தமிழ் மக்களையும், சிங்கள மக்களையும் சமாந்தரமாக சமாளித்துச் செல்ல வேண்டிய நிலை உருவாகும். இது தமிழர்களை பொறுத்தவரையில் மிகச் சாதகமான நிலைமையாகும்.

ஜேவிபி அதிகாரத்திலிருக்கும் காலப்பகுதியில் சிங்கள குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் என்பவற்றுக்குத் தற்காலிக விடுதலை கிடைக்கும் என நம்பலாம்.

கல்வி,சுகாதாரம், போக்குவரத்து போன்ற துறைகளிலும், அரச சேவைகளிலும் மக்கள் விரும்பக் கூடிய மாற்றங்கள் நிகழும். அனைத்து துறைகளிலும் இந்த மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

ஆனால், ஜேவிபியினால் வெற்றி பெற முடியாது, அவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குகள் விரயம், முதலில் சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றி பெறட்டும், பின்னர் தமிழ் மக்கள் ஆதரிக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது.

வாக்கு என்பது வெற்றி பெறுபவர்களுக்காக அளிக்கப்படுவதற்குத் தேர்தல் ஒன்றும் சூதாட்டம் அல்ல. அது  எமது கருத்தையும், தெரிவையும் வெளிப்படுத்துவதாகும்.

ஜேவிபிக்கு அளிக்கப்படும் வாக்குகள் ஒருபோதும் விரயமாகாது. அவர்களுக்கு நாம் அளிக்கும் வாக்குகள் எமக்காக அவர்களைக் குரல் எழுப்பச் செய்யும் கடப்பாட்டை அதிகரிக்கச் செய்யும். அவர்கள் அந்த கடப்பாட்டிலிருந்து விலக மாட்டார்கள் எனத் தாராளமாக நம்பலாம்.

ஆனால், தேசிய இனப்பிரச்சினை விவகாரத்தில் ஜேவிபி தமிழர்களுக்கு எதிரான சக்தி தான். ஏனையவர்களைப் போல் அரசியல் அதிகாரத்துக்காகத் தேசியவாதத்தைக் கையிலெடுத்திருப்பவர்கள் அல்ல. சிங்கள சமூகத்தின் உண்மையான உளகிடக்கையை பிரதிபலிப்பவர்கள். எனவே, ஜேவிபி அதிகாரத்தில் அமர்ந்தால் சிங்கள பேரினவாத கருத்தியலுடனான உண்மையான போராட்டம் ஆரம்பமாகும்.

அந்தவகையில் அனுரகுமாரவை பேரினவாதிகளின் சிறந்த வேட்பாளர் ஆவார். அவரை ஆதரிப்பதால் எமக்கு (சோசலிசத்தை தவிர) இழப்பதற்கு எதுவுமில்லை. பெறுவதற்கே நிறைய உள்ளது.
1:49 AM

கோட்டாவை கோட்டைக்குள் விடலாமா?

by , in
கோட்டபாய சனாதிபதியாகும் வாய்ப்புகள் ஏப்ரல் குண்டுவெடிப்புகளின் பின்னரே பிரகாசமாகியது. கோட்டபாயவுக்கோ, இராஜபக்ச குடும்பத்தினருக்கோ மீண்டும் சனாதிபதி வரப்பிரசாதங்களைப் பெற முடியும் என்ற எண்ணம் இருந்திருக்குமா என்பது நிச்சியமில்லை. ஆனால், ஐதேக வின் செயல்பாடுகள் அவர்களுக்கான வாய்ப்புகளை வலுவாக உருவாக்கிக் கொடுத்து விட்டிருக்கின்றது.

பொதுவாகச் சிங்கள சமூகத்தில் இரு பெரும்பான்மை கட்சிகள் இருக்கின்றன எனச் சொல்லிவந்தாலும், இரண்டு கட்சிகள் என்பதை விட இரண்டு தரப்புகள் என்பது தான் பொருத்தமாக இருக்கும்.

காலணி ஆட்சியின் வரப்பிரசாதங்களால் நகர்ப்புற பிரபு வர்க்கமாக மாறியவர்களின் கட்சி ஐதேக. தமிழர்களிலிருந்தும் காலணி ஆட்சி வரப்பிரசாதங்களால் தம்மை பிரபு வர்க்கமாக நிலைநிறுத்திக் கொண்ட சிலர் இருக்கின்றார்கள். இவர்கள் இருவரும் வர்க்க நலனின் அடிப்படையில் இணக்கம் கொள்வதை இலங்கை அரசியல் முழுவதும் பார்க்க முடியும்.

மேற்கத்திய பண்பாடுகளுடன் நெருக்கம் காட்டும் நகர்ப்புற பிரபு வர்க்கத்துக்கு எதிராக கிராமப்புறத்தைப் பின்புலமாகக் கொண்ட தேசியவாதிகளின் ஐதேக வுக்கு எதிரான தரப்பினர் ஆவர். மேற்கத்திய எதிர்ப்பு, விவசாயிகளை சார்ந்திருத்தல் என்பதன் காரணமாக இவர்களுக்கு, இடதுசாரிகளுடன் ஐதேக வை விட நெருங்கி உறவிருக்கின்றது.

மைத்திரிபாலவுக்கும், ரணிலுக்கும் இணக்கமாக அரசியலில் ஈடுபட முடியாமைக்கு இந்த வேறுபாடும் ஒரு காரணம். இந்த வேறுபாடே மகிந்த தரப்பைச் சீனாவின் பக்கம் நெருங்கி வரச் செய்வதற்கும் காரணமாக இருந்தது.

சீனாவின் பக்கம் செல்வதால் மகிந்தவின் குடும்பத்துக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்த தரகு பணம், அபிவிருத்தி திட்டங்களுக்குக் கிடைத்த உதவிகள், சீன அரசால் ஊழல், சனநாயகம், மனித உரிமைகள் தொடர்பான நெருக்குவாரங்கள் தரப்படாமை எனச் சீனாவுடனான அரசியல்- பொருளாதார உறவுகளைப் பலப்படுத்திக் கொள்ளப் பல காரணங்கள் இருந்தன.

மகிந்த குடும்பத்தில் சீனா பெரும் முதலீட்டைச் செய்திருக்கின்றது. 2015 இன் பின்னரும் மகிந்த அரசியலில் தீவிரமாக செயல்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். இந்த பின்னணியிலிருந்தே கோட்டபாய சனாதிபதி வேட்பாளராகி இருக்கின்றார்.

கோட்டபாய சனாதிபதியானால், எதிர்கொள்ளும் பெரிய சவால் அமெரிக்க – சீன அதிகார போட்டியைச் சமாளிப்பது தான். கோட்டாவால் நினைத்த படி சீன சார்பு நிலைப்பாட்டில் இயங்கமுடியாது.

கோட்டபாய திமிறினால், வழிக்குக் கொண்டு வர, 1990 இல் மாத்தளையில் ஜேவிபி தோழர்களைப் படுகொலை செய்தமை, 2009 போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பு கூறல், மனித உரிமை மீறல்கள் ஏலவே இருக்கும் பிடிகளுடன், அமெரிக்க பிரசாவுரிமை விவகாரத்தையும் அமெரிக்கா கையிலெடுக்கும்.

கோட்டபாய இந்த சவாலை எப்படிச் சமாளிப்பார் என்பதை வெற்றி பெற்றால் பார்க்க முடியும். ஆனால், இதுவரை செய்தது போல் சீனா, அமெரிக்கா என இரண்டு தரப்புடனும் இணக்கமாகச் செல்வது நீண்டகாலத்துக்குச் சாத்தியமில்லை. சீனா – அமெரிக்க மோதல் நாளுக்கு நாள் தீவிரமாகி வருகின்றது. இவர்களின் போட்டியில் இலங்கையின் அமைவிடம் மிக முக்கிய கேந்திர நிலையம். எனவே, இனிவரும் காலங்களில் இலங்கை அரசு ஒரு முடிவை எடுத்துச் செயல்பட வேண்டிய நிலை வரும்.

ஐதேக ஆட்சிக்கு வந்தால் இந்த பிரச்சினை சிக்கலாக இருக்காது. தெளிவாக அமெரிக்கச் சார்பாக வேலை செய்வார்கள்.

ஒன்றில் கோட்டபாய அமெரிக்காவின் நலன்களுக்குச் சார்பாக வேலை செய்ய நேரிடும். ஐதேகவின் அரசாங்கம் இருக்குமாயின் கோட்டபாயவால் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து சீனாவை சமாளித்து கொண்டு அமெரிக்கச் சார்பாக வேலை செய்வது கடினமான விடயமாக இருக்காது.

ஜேவிபி தோழர்களை படுகொலை செய்ய கோட்டபாவை மாத்தளை பிரதேசத்துக்கு நியமித்தவரே அப்போதைய இளைஞர் விவகார அமைச்சராகவிருந்த ரணில் விக்ரமசிங்க தான். மகிந்த பிரமராக நியமிக்கப்பட்ட பிரச்சினையின் போது கூட கோட்டாவும், ரணிலும் அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தினார்கள். எனவே, இவர்களுக்கு இணைந்து வேலை செய்வது கடினமாகாது.

ஆனால், அடுத்த பொதுத் தேர்தலில் மகிந்த வெற்றி பெற்றால், சீன சார்பாக வேலை செய்ய வேண்டிய நிலை வரும். இதன் போது போர்க்குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் விசாரணை நெருக்குவாரங்களை கோட்டபாய எதிர்நோக்க வேண்டிய நிலை வரும்.

எப்படியாயினும், கோட்டபாய சனாதிபதியானால், கடந்த நான்கு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழர் விவகாரத்தைச் சர்வதேசம் மீண்டும் கையிலெடுக்கும்.

தமிழ் பேசும் மக்களைப் பொருத்தவரை சர்வதேசம் தீர்வு தரும் என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் எதுவும் நடக்காது. உரிமைக்கான வெகுசன போராட்டத்தை உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் தீவிரப் படுத்தினால் சாதகமான பலன்களை அறுவடை செய்ய முடியும்.

ஏனெனில், கோட்டபாய சனாதிபதியானால் இந்த பிரச்சினையை நீண்டகாலத்துக்கு இழுத்துச் செல்ல முடியாது. ஒன்றில் அமெரிக்காவுடன் இணங்கிப் போக நேரிடும். அப்படி நடந்தால் தமிழர் தரப்பு சர்வதேசம் எனப்படும் அமெரிக்க நலனுக்கு எதிரான போராட்டங்களின் பக்கம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் இணைந்து வலுவான ஏகாதிபத்திய முன்னணியைக் கட்டியெழுப்பி அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கோட்டபாய சீன சார்பான நிலைப்பாட்டில் சென்றால், சர்வதேசத்துக்கு தமிழர் பிரச்சினையைக் கையிலெடுக்க வேண்டிய நிலை வரும். தமிழர் தரப்பும் போராட்டங்களை தீவிரப்படுத்தினால், போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அது தமிழர் தரப்புக்குச் சாதகமானது என்பதால் கோட்டபாய அந்ந தீர்வை நாடும் சாத்தியம் குறைவு.

அப்படியாயின் தமிழ் மக்களை ஓரளவுக்கேனும் வென்றெடுக்கக் கூடிய வேலைத்திட்டங்களைச் செய்வது தான் கோட்டபாயவுக்கு இருக்கும் சிறந்த தெரிவு. தமிழர்களால் தமது பூரண நலன்களை வெல்லும் நிலைக்குச் செல்ல முடியாது தான். ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் தேசிய அந்தஸ்தை நிலைநாட்டுவதை நோக்கி ஓரடி முன்வைக்கச் சந்தர்ப்பம் கிடைக்கும்.

மகிந்த தரப்பால் கிராமத்துச் சிங்கள மக்களை இணங்க வைக்க முடியும். எனவே, மகிந்த தரப்பைத் தமிழர்கள் சார்பாக ஏதேனும் சாதகமான விடயங்களைச் செய்விக்க முடியுமானால் அது தமிழர் தரப்புக்குப் போரின் பின்னால் கிடைத்த வெற்றியாக அமையும்.

இதற்கு தமிழர் தரப்பில் விட்டுக்கொடுக்காத, உறுதிப்பாடான, அதே நேரம் சிங்கள மக்களுக்கும் விடயங்களைத் தெளிவுபடுத்தி, நம்பிக்கை கொடுக்கக் கூடிய அரசியல் தலைமையும் இயக்கமும் தேவை.

டக்ளஸ், கருணா, வரதர், தொண்டமான், திகாம்பரம். ஹக்கீம் போல் மக்களைக் காட்டிக்கொடுத்து தமது நலன்களை சாதித்துக் கொள்பவர்களாக இருக்கவும் கூடாது. அதே நேரம் கடும்போக்கு நிலைப்பாட்டிலிருந்து எதையும் இல்லமாக்கிக் கொள்ளவும் கூடாது. எனவே, எமக்குத் தேவை பரந்துபட்ட வெகுசன இயக்கமும், கூட்டுத்தலைமையும் ஆகும்.

கோட்டபாய சனாதிபதியானால் தமிழர் தரப்புக்கு இவ்வாறு சாதகமான நிலை உருவாகும் வாய்ப்புள்ளது. ஆனால், அதைச் சாதிப்பதும், இழப்பதும் எமது செயல்பாடுகளைப் பொருத்து தான் அமையும்.

முழு தமிழ் சமூகத்துக்கும் சாதகமான நிலைமை இருக்கின்றதே தவிர, தனித் தனியே தமிழர்களுக்கும், தமிழ் அரசியல் தலைமைகளுக்கும், தமிழ் பிரபு வர்க்கத்துக்கும், வியாபாரிகளுக்கும், அல்லது வேறு வர்க்க குழுக்களுக்கும் ஐதேக ஆட்சியில் கிடைப்பது போன்ற பிரத்தியேகமான நலன்கள் கிடைக்காது.

ஏனெனில், கடந்த காலத்தில் கோட்டபாய எவ்வாறான நிர்வாக பாணியைக் கடைப்பிடிப்பார் என்பதைக் கண்டுள்ளோம். கோட்டாவின் நிர்வாக பாணியை விளங்க போதைப் பொருள் வியாபாரத்தைக் கையாண்ட விதமே போதுமானது.

2009 இன் பின் கொழும்பிலிருந்து போதைப்பொருள் கடத்தல் காரர்களை எல்லாம் அதிரடிப்படையைக் கொண்டு, பாதாள உலக கோஷ்டியை அழிக்கின்றோம் என்ற பெயரில் அழித்து ஒழித்திருந்தார் கோட்டபாய. இதனால், பல போதைப் பொருள் கடத்தல்காரர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள்.

போதைப்பொருள் வியாபாரிகளை ஒழித்துக் கட்டிவிட்டு போதைப் பொருள் வியாபாரத்தை அரசாங்கத்தின் கீழ் (தனக்குக் கீழ்) கொண்டுவந்தார் இராஜபக்ச. என்னதான், போதைப்பொருள் வர்த்தகத்தை ஒழிப்போம் என அரசியல்வாதிகள் முழக்கமிட்டாலும், இலங்கையின் அரசிறை நிதி நிலைமையையும், பொருளாதாரத்தின் நிலைமையையும் விளங்கிக் கொண்டவர்களுக்கு, போதைப்பொருள் வர்த்தகம், அதனுடன் இணைந்த கறுப்புப் பணத்தை அனுமதிக்காமல் தாக்குப்பிடிக்க முடியாது என்பது தெரியும்.

எம்மால் செய்யக்கூடியது, இதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படாத வகையில் முகாமை செய்வது தான். போதைப்பொருளை மக்களுக்கு விற்பதை தடுப்பதைக் கட்டாயம் செய்ய வேண்டும். ஆனால், இதை பொதுவான வழிமுறைகளால் செய்ய முடியாது. போதைப்பொருள் உலகம் என்பது, கடத்தல், கறுப்புப் பணம், பாதாள உலக கும்பல் , அரசியல் எனப் பரந்த வலையமைப்பை கொண்டது.

போர்க்கால நடவடிக்கையின் அடிப்படையிலேயே இந்த போதைப்பொருள் கும்பலை அடக்க முடியும். கோட்டபாய பாதுகாப்பு செயலாளராக இருந்த போது வெலிக்கடை சிறையிலிருந்தவர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம்.

அவர்கள் அனைவரும் கீழ்மட்ட போதைப் பொருள் விநியோகஸ்தர்கள். சிறையிலிருந்து கொண்டே போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்துபவர்கள். இவர்களைக் கொல்வதற்கு முதலே திட்டம் தீட்டப்பட்டது. இதை தெரிந்து கொண்டு சிறை கைதிகள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தின் இடையில் அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாகச் சித்தரிக்கப்பட்டே அனைவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஐதேக ஆட்சிக்கு வந்த பின்னர், அரசாங்கத்தின் பிடியிலிருந்த போதைப் பொருள் வியாபாரம் மீண்டும் போதைப் பொருள் வியாபாரிகளின் கைகளுக்கே சென்றது. இப்போது போதைப் பொருள் வியாபாரம் முன்பு போல் தாராளமாக நடப்பதை அனைவரும் அறிவோம்.

அண்மையில் மைத்திரிபால கூட போதைப்பொருள் கடத்தல் காரர்கள் சிறையிலிருந்தே கடத்தல் தொழிலை வழிநடத்துவதாகவும், அவர்களை தூக்கிலிட வேண்டும் என்றும் கூறியதும் இதனால் தான்.

கோட்டபாய சனாதிபதியானால் இந்த சனநாயக விரோத வழிமுறைகளை எதிர்கொள்ள நேரிடும். ஆனால்,போரின் பின்னரான உடனடிச் சூழலில் செய்தது போல் அராஜக வழியில் செல்ல முடியாது.

உதாரணமாக நெலுக்குளம் பகுதியில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த ஒருவனை கண்டி பகுதிக்குக் கடத்திக் கொண்டு சென்று கொலை செய்திருந்தார்கள். மகிந்தவுக்கு எதிராகச் செயல்பட்ட லசந்த போன்ற ஊடகவியலாளர்களைக் கடத்தி கொலை செய்திருந்தார்கள். இரண்டு நாட்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளிடமிருந்து கையகப்படுத்தி இருந்த தங்கத்தைக் கொள்ளையடித்தவர்களைக் கடத்தி சென்று விசாரணை செய்தாக சிலர் ஊடகங்களுக்கு சொல்லி இருந்தார்கள்.

எனக்கும் 2012 தனிபடப்ட அனுபவம் உள்ளது. கொட்டாவ பகுதியில், உபாலி நியுஸ் பேப்பர் நிறுவனத்துக்குப் பின்னால் முன்னிலை சோசலிச கட்சியின் மாணவர் அமைப்பின் தலைமையகம் இருந்தது. நான் கட்சியிலிருந்த போது இங்கிருந்து தான் அரசியல் வேலைகளில் ஈடுபடுவது வழக்கும். வழக்கமாக ஆண்கள் ,பெண்கள் எனக் கட்சியின் முழு நேரச் செயல்பாட்டாளர்கள் தங்குவார்கள். ஒரு நாள் இரவு நேரத்தில் 20 வரையிலான சிவில் உடையில் ஆயுதம் தரித்த குழு அலுவலகத்தைச் சுற்றிவளைத்து எம்மை விசாரணை செய்திருந்தது.

அலுவலகத்தில் மறைந்து கொள்வதற்குப் பிரத்தியேகமான இடங்கள் இருந்தது. எனக்கும், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளராக இருந்த சஞ்ஜீவ பண்டாரவுக்கும் பிரத்தியேகமான ஏற்பாடுகள் இருந்தது. அன்றைய தினம் நாம் அவர்களிடம் சிக்கியிருக்கவில்லை.

இது நடந்து சில நாட்களுக்குப் பிறகு தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்கச் சென்ற போது பல்கலைக்கழகத்துக்குள் செல்ல விடாமல் புலனாய்வுத் துறையினர் களமிறங்கி அடையாள அட்டைகளை சோதனை செய்தார்கள். நிலைமை மோசமாக இருந்ததால், மாணவர்களை கல்முனை நகருக்கு வரவழைத்துச் சந்தித்திருந்தோம்.

சந்திப்பை முடித்துத் திரும்பி வரும் போது சிவில் உடையணிந்த இராணுவம் எம்மை துரத்தியது. நாம் வந்த பேருந்தில் 10 வரையிலானவர்கள் ஏறி இருந்தார்கள். பேருந்தின் முன்னாலும், பின்னாலும் இராணுவ வாகனங்கள் வந்தன.

அம்பாறை சிங்கள கிராமம் ஒன்றின் நடுவே, புலனாய்வு காரர்களை ஏமாற்றி வேறொரு வாகனத்தில் ஏறி கிராமத்துக்குள் சென்று தங்கியிருந்து, அடுத்த நாளே பயணத்தைத் தொடர்ந்தோம். அடுத்த நாள் காலையில் பேருந்தில் ஏறும் வரை புலனாய்வாவார்கள் வீதியில் எமக்காகக் காத்துக் கிடந்தார்கள்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் மக்கள் போராட்ட இயக்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்றை யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள். கடத்தி காணாமலாக்கப்பட்ட லலித் - குகன் தோழர்கள் முன்னரே யாழ்ப்பாணம் சென்று வேலைகளை ஆரம்பித்திருந்தார்கள்.

ஊடக சந்திப்பில் நானும் பங்குபற்றுவதாக இருந்தது. அன்றைய தினம் காலை யாழ்ப்பாணம் சென்ற போது ஓமந்தை சோதனை சாவடியில் அலைக்கழிக்கப்பட்டேன். அன்றே லலித்தும் குகனும் கடத்தப்பட்டிருந்தார்கள். தோழர்களுக்கு எனது தொடர்பு கிடைக்காததால் நானும் கடத்தப்பட்டிருக்கலாம் என நினைத்திருந்தார்கள்.

இது போல் தனிப்பட்டதும், தோழர்களுக்கு நேர்ந்ததுமாக நிறைய அனுபவங்கள் எனக்கே இருக்கின்றது எனில் அப்போதைய நிலைமையை சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால், அது போன்ற நிலைமை அதே வடிவில் இனியும் வருதற்கு சாத்தியமில்லை.

ஆனால், அமைதியான வழியில் அதை விட அராஜகமான நிலைமை வரலாம். கூட்டாட்சி அரசாங்கத்தின் கீழ் சிறு கதை எழுதிய சத்விக என்ற எழுத்தாளரும், அருவகாடு குப்பை தொட்டிக்கு எதிராகப் போராடிய டில்சாட் என்ற தோழரும் கைதுசெய்யப்பட்டு மாதக்கணக்கில் சிறையிலடைக்கப்பட்டார்கள். முன்பு நடந்ததை மக்கள் கண்டுகொண்ட அளவுக்குக் கூட இவற்றைக் கண்டுகொள்ளவில்லை.

தொழிலாளர், சூழல் சட்டங்களைத் திருத்தி முதலாளித்துவ பொருளாதாரத்தைச் சீர்திருத்தப் போவதாகச் சொல்லும் யார் வந்தாலும் இந்த அராஜக நிலைமைக்கு நாம் முகம் கொடுக்கத் தான் வேண்டும். அது கோட்டா – சஜித் - அணுர யாராக இருந்தாலும் இது நடக்கத் தான் போகின்றது.

ஆனால், நிறைவேற்று சனாதிபதியின் அதிகாரம் என்பது பதிவிலிருப்பவரின் ஆளுமையையும் பொறுத்தது. கோட்டா அந்த பதவியில் அமர்ந்தால் நிச்சியம் உச்சக் கட்ட அதிகாரத்தையும் பயன்படுத்துவார்.

கொழும்பு நகரை அழகுபடுத்தச் செய்தது போல் கடுமையான நடவடிக்கைகளை எதிர்பார்க்கலாம். நாடு உட்கட்டமைப்பு, பொருளாதார அபிவிருத்தியில் முன்சொல்லும். ஆனால், சனநாயகம், சமூக நீதி என்பவற்றில் நாம் பின்னிலைக்குச் செல்வோம்.

ஒழுக்கம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்பப் போவதாகக் கோட்டா இதைத் தான் சொல்கிறார்.

ஒப்பீட்டளவில் அணுர, சஜித்தை விடக் கோட்டாவால் பொருளாதார சீரமைப்பைச் செய்ய முடியும். அது கடுமையான நடவடிக்கைகளாகத் தான் இருக்கும். உதாரணமாக அரச வைத்தியர் சங்கம் போன்ற அமைப்புகள் எல்லாம் வேலை நிறுத்தம் செய்வதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. கொழும்பு பொது நூலகம் போன்ற அதிக முதலீட்டு பெறுமதியைக் கொண்டிருக்கும் இடங்கள் எல்லாம் அபகரிக்கப்பட்டு முதலீட்டு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படும்.

இருந்தபோதும், போர்க்குற்ற விசாரணைகளில் கோட்டாவைத் தப்பிக்க விடாமல் சிக்க வைக்க வேண்டும் என்றால், சனாதிபதி கதிரையில் அமர்த்தி விடுவது தான் சிறந்த முடிவு. வழியில் கணம் இல்லாவிட்டால், செயலில் திடம் இருக்கும் என்றால் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

எதிரியை நுழைய விட்டுச் சிறைபிடித்து காரியம் சாதிக்கும் தந்திரம் தான் கோட்டாவைக் கதிரையில் அமர்த்துவது. ஆனால், அதற்கான திடமும் , செயல்திறனும் உள்ள அமைப்பு எமக்குத் தேவை. அது இல்லாமை தான் எமது பலவீனமும். அந்த பலவீனம் தான் சஜித்துக்கு நிபந்தனை இல்லாத ஆதரவைக் கொடுக்க நிர்ப்பந்திக்கின்றது. மக்களுக்குச் சனநாயக பூச்சாண்டி காட்டி, இல்லாத சனநாயக இடைவெளியைக் கோருகின்றது.

முடிவில் கோட்டா பாயவை சனாதிபதி கதிரையில் அமர்த்திவிடுவதானது, பின்விளைவுகள் நிறைந்த ஆபத்தான நல்ல முடிவாக அமையும் வாய்ப்புகளைக் கொண்டது தான்!
4:35 PM

சஜித் தவிர்க்கப்பட வேண்டிய முதல் வேட்பாளர்

by , in

சஜித் பிரேமதாசாவுக்கே தமிழ் பேசும் கட்சிகளின் ஆதரவு அதிகமாக இருக்கின்றது. தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை ஆதரவும் சஜித்துக்கு தான். ஆனால், தமிழ் அரசியல்வாதிகளும், மக்களும் எப்போதும் சிங்கள கிராமிய மக்களின் மனோபாவம் என்ன என்பதை அறிவதில் தவறு விட்டுவிடுகின்றார்கள்.

இலங்கையில் 37000 வரையிலான சிங்கள கிராமங்களும், அத்தனை கிராமங்களையும் இணைக்கும் விகாரைகளும் இருக்கின்றது. இவர்களுடன் ஏதேனும் வகையில் ஊடாடாமல் இவர்களின் எண்ணங்களை அறிய முடியாது.

தமிழர்களும், தமிழ் தரப்பும் பெரும்பாலும் ஐதேக வுக்கு ஆதரவான நகர்ப்புற சிங்கள மக்களுடன் தான் தொடர்புகள் இருக்கின்றன. பெரும்பாலான ஊடகங்கள் தமிழ், சிங்கள பிரபு வர்க்கத்தினரால் நடத்தப்படுவதால் இந்த நிலை உருவாகியிருக்கின்றது.

சிங்கள கிராம மக்களை பொறுத்தவரையில் பெரும்பான்மையான ஆதரவு கோட்டபாய இராஜபக்சவுக்கு இருந்து வருகின்றது. 2002 காலப்பகுதியில் ஐதேக ஆட்சியின் மீது சிங்கள மக்கள் மத்தியில் ஜேவிபியின் வழிந்த பங்களிப்புடன் பகையுணர்வு பரப்பப்பட்டது. அதே போன்றதொரு நிலை ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் உருவாகி உள்ளது.

ஐதேக கடந்த நான்கு வருட ஆட்சியில் நகர்ப்புற மக்களுக்கு வேலை செய்ததே தவிர, கிராம மக்களுக்கான வேலைத்திட்டங்களை செய்யவில்லை. இதுவும் ஐதேக வின் வீழ்ச்சிக்குக் காரணமாகும். கடந்த தேர்தலில் ஐதேக மகிந்த தரப்பின் மீது முன்வைத்த ஊழல், மனித உரிமை குற்றச்சாட்டுகள் தொடர்பாக உருப்படியான எந்த நடவடிக்கைகளையும் செய்யவில்லை. கிராமப்புறங்களில் மகிந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களைக் கூட முன்னெடுக்க வில்லை. மகிந்த காலத்தில் அமைக்கப்பட்ட பாலங்களை பராமரிக்கக் கூட ரணில் - மைத்திரி கூட்டாட்சியால் முடியவில்லை.

மகிந்த தரப்பு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஐதேக அதைவிடப் பெரிய ஊழல்களை செய்தது.

இந்த காரணங்களினால், ஐதேக மீது சிங்கள மக்களின் விரக்தி முன்பைவிட அதிகமாக இருக்கின்றது. இந்த தேர்தலின் முடிவுகளில் நாம் அதைக் காணமுடியும். கிராமப்புறங்களைப் போல் அல்லாவிடினும், நகர்ப்புறங்களிலும் ஐதேக மீதான குறிப்பிடத்தக்க விரக்தி தெரிகிறது.

பாரம்பரிய ஐதேக ஆதரவாளர்களைத் தவிர்ந்த நகர்ப்புறவாசிகள் சஜித்துக்கு வாக்களிப்பார்களாயின் அதற்கு ஒரே காரணம் வெற்றிபெறக் கூடிய வேறு வேட்பாளர்கள் இல்லை என்பது மாத்திரம் தான் இருக்க முடியும். ஆனால், இம்முறை அனுரகுமார திசாநாயக்க மாற்று வேட்பாளராக கணிசமான நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

எனவே, சிங்கள கிராமப்புறங்களில் ஐதேகவின் படுதோல்வியை எதிர்பார்க்கலாம். சிங்கள நகர்ப்புறங்களிலும் பின்னடைவை எதிர்கொள்வார்கள். சில இடங்களில் அனுரகுமாரவிடம் தோற்று மூன்றாம் இடத்துக்குச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.

இதற்குக் காரணம் தவிர்க்கப்பட வேண்டிய முதல் வேட்பாளராக ஜதேக வை சிங்கள மக்கள் இனம் கண்டிருப்பது தான்.

எனவே தான் இம்முறை சிங்கள தேசியவாத முகம் கொண்ட ஒரு வேட்பாளரைக் களமிறக்க வேண்டும் என்ற கருத்து ஜதேக தரப்பில் வலுப்பெற்றது. ரணில் விக்ரமசிங்க தவிர்க்கப்பட்டு, கருஜெயசூரிய, சம்பிக்க ரணவக்க போன்றவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது இதனால் தான்.

தமிழ் பேசும் மக்கள் சஜித்தை ஆதரிக்க கோட்டபாய ஆட்சிக்கு வரக் கூடாது என்பதைத் தவிர குறிப்பான காரணம் எதுவும் இல்லை. அப்படி ஏதும் காரணம் இருப்பின் சஜித் பிரதி தலைவராக இருக்கும் கடந்த நான்கு வருட ஆட்சியிலிருந்து காரணங்களை முன்வைத்திருக்க வேண்டும்.

ஐதேக வுக்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகளுக்கு கோட்டபாயவை ஆதரிக்கும் தார்மீக உரிமை இல்லை. அவர்களே தற்போதைய ஆட்சியை உருவாக்கவும், காப்பாற்றவும் காரணமாக இருந்தார்கள்.

மாற்றுத் தெரிவை நாட வேண்டுமென்றால், இவ்வளவு காலம் அனுபவித்து வந்த வரப்பிரசாதங்களை இழக்க நேரிடும். அணுரவை அல்லது வேறு யாரையும் ஆதரித்தால் மீண்டும், போராட்ட அரசியலில் இறங்க வேண்டும்.

எனவே, கோட்டபாயா மீதான போர்க்குற்ற, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளைப் பிரச்சாரம் செய்து தமிழ் பேசும் மக்களில் பயத்தை உருவாக்கி சஜித்தக்கு வாக்களிக்கக் கோருவதை தவிர வேறு வழியில்லை.

கேப்பாபுலவில் 1000 நாட்களை அண்மிக்கும் மக்களின் போராட்டத்துக்கும், அனைத்து வெகுசனங்களின் ஆதரவையும் பெற்ற பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் வேதன போராட்டத்தையும் கண்டுகொள்ளாத ஐதேக வுக்கு வேறு எதைக் கூறி வாக்களிக்கக் கோர முடியும்?

ஆனால், கோட்டபாயவை நிராகரித்து, சஜித்தை ஆதரிக்கத் தமிழ் தரப்பு கூறும் காரணம் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கும், தேசிய இருப்புக்கும் சாவு மணி அடிக்கும் விடயங்களாகும்.

‘போர்க்குற்றம் புரிந்த கோட்டாவுக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம்’. ‘தமிழ் மக்களை அழித்த மகிந்தவுக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம்” எனும் சொல்லும் போது தமிழ் பேசும் மக்களின் அவலங்களுக்கு ஒரு நபர், ஒரு குடும்பம், ஒரு அரசியல் கட்சி காரணம் என்பதை ஏற்றுக் கொண்டு விடுகின்றோம்.

எமது பிரச்சினை பேரினவாதத்துடன் தான். கோட்டபாய எனும் தனி நபருடனோ, மகிந்த குடும்பத்துடனோ அல்ல. தமிழ் பேசும் மக்களை அழிப்பதில் பேரினவாதிகள் எவரும் முரண்பட்டவர்கள் அல்ல.

இதுவரை யுத்தம் நடத்திய இருதரப்புமே தமிழ் பேசும் மக்களை அழிக்கத் தான் யுத்தம் நடத்தினார்கள். அனைத்துப் பேரினவாதிகளும் தமிழ் பேசும் மக்கள் மீதான இனவழிப்பை நடத்தி வந்திருக்கின்றார்கள்.

கோட்டபாயவை எதிர்த்து சஜித்தை ஆதரிக்கும் போது, சிங்கள பேரினவாத்தை காப்பாற்றி விடும் வேலையைச் செய்து விடுகின்றோம். இம்முறை தேர்தலில் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக யாரும் கதைக்கவில்லை. காரணம். தமிழர் தரப்பு தேசிய அபிலாசைக்கான போராட்டத்தை கைவிட்டு விட்டது தான்.

இப்போது கோட்டபாயவை இனவழிப்பு செய்தார் எனக் காரணம் காட்டி, சஜித்தை ஆதரிப்பதானது எமது தேசிய விடுதலை அபிலாசையை நல்லடக்கம் செய்யும் வேலை தான். நாம் இனவழிப்பு, போர்க்குற்றம் போன்ற காரணங்களுக்காக வேட்பாளர்களை எதிர்க்க வேண்டுமாயின், சஜித், கோட்டா இருவரையுமே ஆதரிக்க முடியாது,

தேசிய இனப்பிரச்சினைக்குச் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அல்லது தேசிய அந்தஸ்தை நிலைநாட்டும் வகையிலான தீர்வு திட்டங்களை முன்வைப்பவர்களைத் தான் ஆதரித்திருக்க வேண்டும். அல்லது தேர்தலை புறக்கணித்திருக்க வேண்டும்.

சஜித் பிரேமதாசா நீண்ட காலமாகவே சனாதிபதி ஆகும் கனவுகளுடன் காய் நகர்த்தி வந்தவர். தந்தை சனாதிபதியாக இருந்த காரணத்தால் சனாதிபதியாகும் ஆசை இருந்திருக்கலாம். எனவே, சஜித் சிங்கள சமூகத்தில் தன்னை பௌத்த மதத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் தேசிய வாதியாக முன்னிலை படுத்தியிருந்தார்.

சஜித்தின் அரசியல் பிரவேசம் 1993 தந்தை ரணசிங்க பிரேமதாசா கொலை செய்யப்பட்ட பின்னர் நடந்தது. அப்போது 26 வயது. அம்பாந்தோட்டை மாவட்டத்தின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். 2000 ஆம் ஆண்டிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகின்றார்.

சஜித்தின் தந்தை ரணசிங்க பிரேமதாசாவின் செல்வாக்கே சஜித்தின் அரசியல் வெற்றிகளுக்கு மூலதனமாக இருந்து வந்தது. சனாதிபதி வேட்பாளரானதுக்கு தந்தையின் செல்வாக்கே காரணம்.

ரணசிங்க பிரேமதாசா இலங்கையின் சீரழிவுக்குக் காரணமான தாராளமய பொருளாதார கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட 1978 ஆம் ஆண்டிலிருந்து 1989 வரை பிரதமராக பதவியிலிருந்தார். மக்களுக்கு விரோதமான தாராளமய பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் கட்டாயமாக எதிர்ப்புகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதற்காகத் தான் ஐதேக நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி முறையை உருவாக்கினார்கள்.

ஜேஆர் சனாதிபதியாக இருந்த காலத்தில் ரணசிங்க பிரேமதாசாவே பிரதமராக இருந்து எல்லா எதிர்ப்புகளையும் கொடூரமாக அடக்கியவர். சனாதிபதி ஆன பின்னும் இது தொடர்ந்தது.

ஆட்சியை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள் எல்லாம் இரகசியமாகக் கடத்தப்பட்ட பின்னர் களனி ஆற்றில் சடலங்களாக மீட்கப்பட்டார்கள், சக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடமே திகதி இடப்படாத இராஜினமா கடிதங்களை வாங்கி வைத்திருந்தார். இவரது காலத்தில் ஜேவிபி உறுப்பினர்கள் தெருக்களில் டயர்கள் மாட்டப்பட்டு எரிக்கப்பட்டார்கள்.

பிரேமாதாசா இந்த அராஜகங்களைச் செய்த காலத்தில் அவருடன் ரணில் விக்ரம சிங்கா இளைஞர் விவகார அமைச்சராக இருந்தார். ஜேவிபி உறுப்பினர்களைச் சித்திரவதை செய்த முகாம்கள் ரணில் விக்ரமசிங்கவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது.

ரணசிங்க பிரேமதாசா தாராளமய கொள்கையை அமுல்படுத்த முயன்ற 15 வருட கொடூர ஆட்சியின் விளைவுகளை விமர்சித்து, தாராளமய பொருளாதார கொள்கைக்கு மனித நேய முகம் கொடுப்பேன் எனும் கோசத்தை முன்வைத்தே சந்திரிக்கா அம்மையார் சனாதிபதி தேர்தலில் வென்றார்.

இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவேன் எனக் கூறிய ரணசிங்க பிரேமதாசாவின் சனநாயக விரோத அடக்குமுறை ஆட்சி நடத்தியிருந்தாலும், மக்களுக்கான நலன்புரி சேவைகளை விஸ்தரித்திருந்தார். இதனால் கிராமிய மக்களின் ஆதரவும் இருந்தது.

சஜித் பிரேமதாசாவும் தந்தையின் வழிமுறையையே பின்பற்றப் போவதைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தி உள்ளார். மக்களுக்கான சமூக நலன்புரி சேவைகளை விஸ்தரித்தால், தனிநபர்களின் கொள்வனவு சக்தி அதிகரிக்கும். எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கைக்கு வந்து உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். இது தான் சஜித்தின் திட்டம்.

ஆனால், இலங்கைக்கு முதலீட்டாளர்கள் வர விரும்பாமைக்கு காரணம், இங்குத் தொழிலாளர் நலன் பாதுகாப்பு சட்டங்களும், சூழல் பாதுகாப்பு சட்டங்களும் கடுமையானது. சூழலைச் சேதப்படுத்தாமல், தொழிலாளர்களைச் சுரண்டாமல் மூலதன உரிமையாளர்களால் கொள்ளை இலாபம் சம்பாதிக்க முடியாது. எனவே, மக்களுக்கு விரோதமான சட்டத்திருத்தங்களைச் செய்ய வேண்டும். எதிர்ப்புகளை அடக்க வேண்டும்.

சஜித் மாத்திரமல்ல கோட்டாவும், அனுரவும் கூட இதை தான் செய்யப் போவதாகச் சொல்கின்றார்கள். இவர்களின் வழிமுறைகள் தான் வித்தியாசம். யாருக்கும் முன்னர் போல் அராஜக வழிமுறைகளைப் பின்பற்ற முடியாது. எனவே. தந்திரமான வழிகளில் செய்வார்கள்.

ஐதேக இந்த தந்திரங்களில் தேர்ந்தவர்கள் என்பதை நாடு அறியும். அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு ஐதேக ஆட்சி மக்கள் விரோதமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

சஜித் சனாதிபதியானால், அவர்களின் அமெரிக்கச் சார்பு காரணமாக, போர்க்குற்றம், மனிதவுரிமை மீறல் போன்ற சர்வதேச நெருக்குவாரங்களிலிருந்து விடுபடுவார்கள்.

ஆனால், தமிழ் பேசும் மக்கள் போராட்டங்களில் இறங்காத வண்ணம் ஏமாற்று வேலைகளைச் செய்ய வேண்டும். இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழர்களுக்கு ஒரு கதையும், சிங்களவர்களுக்கு ஒரு கதையும் கூறி ஏலவே,ஏமாற்று வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள்.

சஜித் வேட்பாளராக்கப்படும் காரணமும் தமிழர்களுக்கு எதிரானதாகும். ரணில் விக்ரமசிங்க தமிழர் தரப்புக்குச் சாதகமான வேட்பாளர் என்ற எண்ணம் சிங்கள மக்களிடம் உண்டு. சிங்கள பேரினவாதத்துக்குத் தமிழ் பேசும் மக்களைக் கூட்டில் அடைத்து சிங்களவர்களுடன் இணைத்து வைக்கும் தலைமை தான் தேவை.

இந்த பேரினவாத சிந்தனைக்கு உரம் போடக்கூடிய சிங்கள தேசிய முகம் கொண்ட வேட்பாளர் சஜித் என்பதாலேயே ரணில் விக்ரமசிங்க புறக்கணிக்கப்பட்டு, சஜித் வேட்பாளரானார்.

சஜித் சனாதிபதியாக வேண்டும் எனத் திட்டமிட்டுக் காய்நகர்த்தி வந்தவர். கடந்த காலங்களில் நாடு முழுவதும் 1000 புத்தர் சிலைகள், 2000 விகாரைகள் அமைக்கும் வேலைகளைச் செய்திருந்தார்.

இவ்வாறு சஜித் சனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்கு மாத்திரம் அல்ல, வேட்பாளராவதற்கும் பெருந்தொகை நிதியை செலவழித்துள்ளார். இந்த நிதி எங்கிருந்து அவருக்குக் கிடைத்தது?

சஜித் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் எதிலும் தனது பெயர் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாகக் காய் நகர்த்தி வந்திருக்கின்றார். அவரது மனைவியின் குடும்ப வியாபாரம், தனது வியாபாரங்கள் தொடர்பான தகவல்களைக் கூட வெளியே தெரியாத வகையில் இரகசியமாகக் காத்து வந்துள்ளார். ஐதேகவின் ஏனைய தலைவர்களால் அதைச் செய்ய முடியவில்லை.

சஜித்தின் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதை வலியுறுத்தவில்லை. சனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தப் போவதாக சொல்கின்றார். கட்சியைப் பற்றிக் கதைக்காமல், ‘நான், நான்’ எனத் தன்னையே சஜித் முதனிலை படுத்துகின்றார்.

எனவே, இவர் இரண்டு தடவை சனாதிபதி ஆக முயற்சிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. இது வரை திட்டம் போட்டு சனாதிபதி வேட்பாளரானவர், வெற்றி பெற்றால் அடுத்த தடவை சனாதிபதியாவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும்.

எனவே, சிங்கள மக்களை வென்றெடுக்க பேரினவாதத்தை போசித்து தீனி போடும் வேலையைச் செய்வதைத் தவிர சஜித்துக்கு எந்த தெரிவும் இல்லை.

எனவே, தான் சஜித்தை ஆதரிப்பதானது, தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் கோவணத்தையும் அவிழ்த்துக் கொடுத்துவிடும் முடிவாகும்.

இனிவரும் காலங்கள் அனைத்து தமிழ் பேசும் மக்களின் நலன்களைக் கட்டிக் காப்பதற்கான வழி, பரந்துபட்ட வெகுசன போராட்ட அரசியலுக்குள் செல்வது தான். இந்த தேர்தலில் வேறு தெரிவுகளுக்குச் செல்ல முடியவில்லை எனில், குறைந்த பட்சம் எமது போராட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கக் கூடிய அரசியல் சக்திகளையாவது ஆதரிக்க வேண்டும்.
5:44 AM

சஜீத்தும் சானிட்ரி நெப்கினும்

by , in
சனாதிபதி தேர்தல் சந்தை வாக்காளர்களை ஏமாற்றும் வாக்குறுதிகளால் நிறைந்து வழிகின்றது.

கடந்த தேர்தலில் சனநாயகம், நல்லாட்சி தொடர்பாக கதைத்தாவது இருந்தார்கள். இந்த தேர்தலில் மருந்துக்குக் கூட அந்த கதைகள் இல்லை.

பிரதான வேட்பாளர்கள் தீவிரமான நடைமுறைகளை அமுல்படுத்துவதன் மூலம் முதலாளித்துவ பொருளாதாரத்தைச் சீரமைக்கப் போவதாகச் சொல்கின்றார்கள். சனநாயகம் இல்லாத முதலாளித்துவம் கொடூரமானது. இதை மறைக்கக் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றார்கள்.

சஜீத் பிரேமதாசா பெண்களுக்கு சானிட்ரி நெப்கின் எனப்படும் விடாய் கால அணையாடைகளை இலவசமாக வழங்கப் போவதாகச் சொல்லிய தேர்தல் வாக்குறுதியும் இந்த வகையைச் சேர்ந்தது தான்.

2015 தேர்தலில் ஐதேக கட்சியின் தலைவர் தலவாக்கலை - ஹட்டன் கூட்டங்களில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் பெற்றுத் தருவதாகச் சொன்னார். இந்த தேர்தலில் சஜீத் அதை 1500 ரூபாயாக அதிகரித்து விட்டார். இது போன்ற ஏமாற்றும் அறிவிப்பு தான் சானிட்ரி நெப்கின் இலவசமாக வழங்கும் அறிவிப்பும்.

தேர்தலில் பெண்களின் ஆதரவு மிக முக்கியமானதாகும். வாக்காளர்களில் சரிபாதிக்கும் அதிகமானவர்கள் பெண்கள். முன்னர் போல் பெண்கள் வீட்டு ஆண்கள் சொல்பவர்களுக்கு வாக்களித்து விட்டு வரும் நிலை இப்போது இல்லை. முடிவெடுப்பதில் பெண்கள் முன்னரை விட அதிகமாகப் பங்குபற்றுகின்றார்கள்.


நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை வீட்டில் நேரடியாக எதிர்கொள்பவர்கள் பெண்கள் தான். கடந்த நான்கு வருடங்களில் விலைவாசி உயர்வு, பாடசாலைகளில் அதிகரித்த கட்டணங்கள், வைத்திய செலவுகள் அதிகரித்தது முதல் தற்போதைய எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு வரை அனைத்து நெருக்கடிகளையும் நேரடியாக எதிர் கொண்டவர்கள் பெண்கள் தான்.

விலைவாசி மாத்திரம் அல்ல, உணவுப் பொருட்கள் உட்பட நுகர்வு பொருட்களின் தரமும் மோசமானதாகி உள்ளது.

நீண்ட காலம் ஆட்சியில் இருக்காத ஐதேக, அதிகாரத்துக்கு வந்த பின் அவர்களது பிரபுவர்க்க சகாக்கள் பொருளாதார ரீதியாக விருத்தியடைய அனைத்து ஏற்பாடுகளையும் சலுகைகளையும் உருவாக்கிக் கொடுத்திருந்தார்கள்.

முதலாளித்துவத்தில் மோசடி செய்யாமல், மக்களைச் சுரண்டாமல் விரைவாகப் பணக்காரர் ஆவது சாத்தியமில்லை.

ஐதேகவின் சகாக்களின் இலாப வெறியினால் தான் சந்தையில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் தரம் மோசமானதாகியது. இதன் விளைவுகளை அனுபவித்து வருபவர்கள் பெண்கள் தான்.

நாம் அன்றாடம் பயன்படுத்த உப்பையும், சீனியையும் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

சமையலில் கைதேர்ந்த எம் அம்மாக்கள் அண்மைக்காலங்களில் சாப்பாட்டுக்குச் சேர்க்கும் உப்பு, சீனியின் அளவுகள் பிழைத்துப் போவது, அநேகமாக அனைத்து குடும்பங்களிலும் நடக்கும் விடயம்.

எங்கள் அம்மாக்களின் கைப்பக்குவம் பிழைத்துப் போனது எப்படி?

அவர்கள் முன்பு பயன்படுத்திய அதே அளவு சீனியையும், உப்பையும் தான் பயன்படுத்துகின்றார்கள்.

ஆனால், விற்பனை செய்யப்படும் உப்பில், முன்பு போல் உப்பின் செறிவு இருப்பதில்லை. சீனியில் முன்பு இருந்தது போல் சீனியின் செறிவு இருப்பதில்லை. இது சரியாகப் பாலுக்குத் தண்ணீர் கலந்தது போன்ற மோசடி.

இவை கலப்படம் அல்லது தரமானது இல்லை என்பதால், இனிப்பு, உவர்ப்பு சுவைகளின் செறிவுகள் ஒரே அளவில் இருப்பதும் இல்லை.

முன்பு ஒரு மேசைக்கரண்டி சேர்த்துப் பெறும் இனிப்பு சுவையை, இப்போது விற்கப்படும் சீனியின் ஒரு மேசைக்கரண்டியிலிருந்து பெற முடிவதில்லை. உப்புக்கும் இதே நிலை தான். கடைக்குக் கடை, கம்பனிக்கு கம்பனி இது வேறுபடுகின்றது.

தேநீர் தயாரிக்கும் போது பால் மாவைத் கொஞ்சம் வாயில் போட்டுக் கொள்ளும் பழக்க உள்ளவர்களாக இருந்தால், சில பால் மாக்களில் சீனி கடிபடுவது தெரிந்திருக்கும். பால் மாவில் சீனியை கலந்து விற்பனை செய்கின்றார்கள்.

இதனால், முன்னரை விட அதிகமான சீனியையும், உப்பையும் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கலப்படங்களால் அல்லது தரமற்ற பொருட்களினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளைத் தனியாகப் பார்க்க வேண்டும்.

இப்படியாகக் கடந்த ஆட்சியின் மோசடிகளால் வீட்டில் பெண்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளிலிருந்து திசைதிருப்பும் வகையில் சஜீத் பிரேமதாசா சானிட்ரி நெப்கின்கள் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சஜீத் பிரதி தலைவராக இருக்கும் கட்சியின் ஆட்சியில் தான் சானிட்ரி நெப்கின்களுக்காக மறைமுக வரி 102 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது. அதாவது உண்மையான விலைக்குச் சமமான வரி வசூலிக்கப்பட்டது.

அப்போதெல்லாம் சஜீத் பி குரல் எழுப்பவில்லை. இதற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்கள் இருக்கின்றார்கள்.

சானிட்ரி நெப்கின்கள் வாங்க முடியாததால் பாடசாலை மாணவிகள் பலர் மாதவிடாய் காலத்தில் பாடசாலைக்குச் செல்வதில்லை என சஜித் கூறியுள்ளார். உண்மையில் இதற்கான பிரதான காரணம் பாடசாலைகளில் சுகாதாரமான மலசலக் கூட வசதிகளும், தண்ணீர் வசதியும் இல்லாதது தான்.

நான் பல்கலைக்கழகத்துக்கு சென்ற காலத்தில் பீடத்தில் 80 வீதம் பெண் மாணவிகள் தான். ஆனால்இ பெண்களுக்கான கழிப்பறை இருக்கவில்லை. இதற்காக போராட நேர்ந்தது. அநேகமான பொது ஸ்தானங்களின் நிலைமை இது தான்

பாடசாலைக்குக் கல்வியை நடத்துவதற்கான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் குறைத்துள்ளது, எனவே, பாடசாலைகளில் புதிதாக அபிவிருத்திகள் செய்வதும் குறைந்து விட்டது. இதன் போது சஜீத் வாய் திறக்கவில்லை.

வரவு செலவு திட்டத்தில் மலசலக் கூடங்கள் அமைப்பதற்காக நிதி ஒதுக்குவதாகச் சொன்னார்கள். ஆனால், இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

வாக்கு சேகரிக்கப் பிரச்சாரம் பெற்றுதரக் கூடிய கண்காட்சி அபிவிருத்தி திட்டங்களை மட்டும் தான் செய்தார்கள்.

சஜீத் இந்த பிரச்சினைக்கு உண்மையாகத் தீர்வு காண விரும்புவார் ஆயின், பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் பெண்கள் பயன்படுத்தக் கூடிய வகையில் தரமான மலசலக் கூட வசதிகளை அமைத்துக் கொடுக்க வேண்டும்.. ஆனால், சஜித்தின் நீண்ட நெடிய அரசியல் வரலாற்றில் இதைச் செய்ய முயன்றதாக வரலாறு இல்லை.

ஆனால், அவரின் தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு வடக்கு – கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 1000 பெரிய புத்தர் சிலைகளை அமைக்கும் வேலையைச் செய்து வருகின்றார். மலசலக் கூடம் அமைத்தால் வாக்கு கிடைக்காது. புத்தர் சிலைகள் அமைத்தால் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறலாம்.

இவர்கள் அறிவிக்கும் இலவசங்கள் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதும் கேள்வி தான். இலவச இணையச் சேவை எனச் சொன்னார்கள். ஆனால் நடந்தது தொலைப்பேசி அட்டைகளுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்திவிட்டது தான்.

இதுவரை விவசாயிகளுக்கு உரமானியம் வழங்கிய இலட்சணத்தையும் விவசாயிகள் அறிவார்கள்.

காலம் காலமாக விவசாயம் செய்து வருபவர்கள் தாம் விவசாயிகள் என நிரூபிப்பதற்கும், உரமானியம் பெறுவதற்கும் நாய் படாத பாடு பட வேண்டி இருந்தது. இதற்கே இந்த நிலை என்றால் சஜீத்தின் இலவச சானிட்ரி நெப்கின் திட்டத்தைப் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த இலவச அறிவிப்பின் பின் வாக்கு பொறுக்கும், வியாபார நோக்கமும் உள்ளது. சஜீத்தின் மனைவி வழி சொந்தக்காரர்கள் 2016 இல் சானிட்ரி நெப்கின் தயாரிக்கும் தொழிலை ஆரம்பித்திருந்தார்கள். அனைத்து கட்சிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் தம்மிக்க பெரேராவும் இதே தொழிலை ஆரம்பித்திருக்கின்றார். எனவே, இலவசமாகக் கொடுக்கப் போகின்றோம் என்ற பெயரில் இந்த இருவரில் ஒருவரின் தயாரிப்பைத் தான் விளம்பரப்படுத்தப் போகின்றார். இதற்கும் மக்களின் வரிப்பணம் தான் பயன்படுத்தப்படும்.

உண்மையில் தேர்தல் காலங்களில் அறிவிக்கப்படும் இலவசங்கள், அபிவிருத்தி திட்டங்களின் பின்னால் தெளிவான வியாபார திட்டமும் இருக்கும்.

சஜித்தின் அமைச்சின் கீழ் இருந்த பொறியியல் திணைக்களத்திலும், வீடமைப்பு சார்ந்த அரச திணைக்களங்களும் நட்டத்தில் இயங்க, சஜித்துக்கு நெருக்கமான கட்டுமான தொழில் செய்யும் கம்பனிகள் இலாபகரமாக இயங்குவதின் இரகசியமும் சஜித்தின் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட 5000 வரையிலான வீட்டுத்திட்டங்கள் தான்.

சஜித், பெண்களின் மாதவிடாய் கால பிரச்சினையைக் கதைக்கும் போது, ரைகம் போன்ற அவரின் தேர்தல் செலவுக்குப் பணம் கொடுக்கும் கம்பனிகள் விற்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகள்(கோழி இறைச்சி, முட்டை, செயற்கை உணவுகள், சில மரக்கறிகள்….) தொடர்பாக வாய் திறப்பதில்லை. இந்த மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டதன் விளைவாகத் தான், இப்போதெல்லாம் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே சிறுமிகளுக்கு மாதவிடாய் ஆரம்பித்து விடுகின்றது.

தனது உடல் தொடர்பாக, பிள்ளைப் பேறு தொடர்பாகத் தெளிவு ஏதும் இல்லாத நிலையில், மனமுதிர்ச்சி அடைந்திருக்காத காலத்தில் இந்த நிலை பாரிய சிக்கலுக்குரியது.

சானிட்ரி நெப்கின் வாங்க முடியாதது தான் பிரச்சினை எனச் சொல்லும் சஜித் இந்த பிரச்சினை தொடர்பாக வாய்திறப்பதில்லை. இதைக் கதைத்தால் முதலாளிகளின் நிதி அனுசரணை இல்லாமல் போய்விடும்.

நடைமுறையில் பெண்களின் உரிமைகள் தொடர்பாக, பிரச்சினைகள் தொடர்பாக ஏதுவும் செய்யாது, வெறுமனே வாக்குகளைப் பெறுவதற்காகப் பரபரப்பான வாக்குறுதிகளை அள்ளி வீசுவது அயோக்கியத் தனமான அரசியல் பண்பாடாகும். மக்கள் இதற்கு ஒரு போதும் ஆதரவளிக்கக் கூடாது,

பெண்களின் உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பான உண்மையான கரிசனை கொண்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமாயின், அதற்கான அரசில் பண்பாட்டையும், கொள்கையையும் கொண்டவர்கள், பெண்களின் உரிமைகளுக்காகவும் நீண்ட காலமாகக் குரல் எழுப்பிப் போராடுபவர்கள் தேர்தலில் போட்டி இடுகின்றார்கள். அவர்களுக்கு வாக்களிப்பது தான் பொருத்தமானதாக இருக்கும்.
12:27 PM

இலங்கையைக் குப்பைத் தொட்டியாக்கும் ஆட்சியாளர்கள் #பகுதி 11

by , in
இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று பாடபுத்தகத்தில் படித்திருப்போம். நம் ஆட்சியாளர்களும், பிரபு வர்க்கத்தினரும் விரைவில் குப்பைத்தொட்டி எனச் சொல்லவைத்துவிடுவார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

கொழும்பு துறைமுகத்திலும், கட்டு நாயக்கா ஏற்றுமதி வலயத்திலும் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட கழிவுப் பொருட் கொள்கலன்கள் அண்மைக்காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விடயம் வெறும் பரபரப்பாகப் பார்த்துவிட்டுக் கடந்து போகவேண்டிய விடயமல்ல. இலங்கையின் அரச இயந்திரமும், ஆட்சியாளர்களும் யாருக்காக? யாரின் நலன்களுக்காகச் செயல்படுகின்றார்கள் என்பதை அம்பலப்படுத்தும் நிகழ்வாகும்.

இதற்காகக் கழிவுப் பொருட் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தனி நிகழ்வாக அல்லாது, தொடர்பு பட்ட அனைத்து விடயங்களையும் தொகுப்பாக ஆராய வேண்டும்.

சூலை மாதம் கொழும்பு துறைமுகத்திலும், கட்டு நாயக்கா ஏற்றுமதி வலயத்திற்குட்பட்ட பிரதேசத்திலும் கழிவுப் பொருட்கள் அடங்கிய 241 கொள்கலன்கள் இருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இவை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன.

குப்பை கொள்கலன்கள் 2017 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றது. இரண்டு வருடங்களாக இந்த விடயம் வெளியில் வராதது ஏன் என்ற கேள்வியை ஊடகங்கள் பெரிதாக எழுப்பவில்லை. சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களும் ஏதேதோ காரணங்களைச் சொல்லிச் சமாளித்திருந்தது.

குப்பை கொள்கலன்களை இறக்குமதி செய்திருந்தவர் இலங்கையின் அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் தனிநபரான தம்மிக்க பெரேரா. இவரை 2019வது சனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிடுமாறு ரணில் விக்ரம சிங்க அழைப்புவிடுத்திருந்தார். ஜேவிபினர் தம்மிக்க பெரேராவை கொண்டு கருத்தரங்குகளை நடத்தியிருந்தனர். தம்மிக்க பெரேராவும் கடந்த மே மாதமளவில் சனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சாரங்களை ஆரம்பித்திருந்தார்.
மறுபுறம் சஜீத் பிரேமதாசா நீண்ட நாட்களாகவே சனாதிபதி வேட்பாளராவதற்குக் காய்களை நகர்த்தி வந்திருந்தார். ரணில் விக்ரம சிங்க அவர்கள் தம்மிக்க பெரேராவை பொது வேட்பாளராக முயற்சி செய்தது, சஜீத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. எனவே தான், தம்மிக்க பெரேராவை ஓரங்கட்டுவதற்காக சஜீத்துக்குச் சார்பான தரப்பால் குப்பை கொள்கலன் விடயம் வெளியில் கசியவிடப்பட்டது.

சனாதிபதவி போட்டியிருந்திராவிட்டால், இந்த விடயம் இன்றைக்கும் வெளியில் வந்திருக்காது.

இலங்கை சட்டங்கள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகளின் பிரகாரம் குப்பைகளை இறக்குமதி செய்யமுடியாது. 1989 ஆம் ஆண்டு சில மூன்றாம் உலக நாடுகளின் முயற்சியின் பலனாக ஆபத்தான கழிவுப் பொருட்களை நாடுகளின் எல்லைகளைக் கடந்து கொண்டு செல்வதைத் தடுக்கும் பாசல் சமவாயம் எனும் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. பாசல் சமவாயத்தில் 1992-93 காலப்பகுதியில் இலங்கையும், பிரித்தானியாவும் கைச்சாத்திட்டிருந்தது.
எனவே, பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு ஆபத்தான குப்பைகள் கொண்டுவரப்பட்டது குற்றமாகும்.

இலங்கையின் சுங்க கட்டளைச் சட்டம், சுற்றாடல் சட்டங்கள், ஏற்றுமதி இறக்குமதி சட்டங்களின் பிரகாரமும் வெளிநாடுகளிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்ய முடியாது. இலங்கையின் சூழல் தொடர்பான சட்டங்களும், தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களும் ஏனைய நாடுகளை விடச் சற்று இறுக்கமானவை. இந்த சட்டங்களைத் தளர்த்தி விட வேண்டும் என்பது உலக முதலாளிகளினதும், அவர்களுக்கு இலங்கையில் தரகு வேலை செய்பவர்களின் நீண்டநாள் பிரத்தமாக இருக்கின்றது.

2012 ஆம் ஆண்டு இலங்கையின் இறக்குமதி தொடர்பான சட்டங்கள் கட்டுப்படுத்தாத வகையில் இறக்குமதி நடவடிக்கைகளைச் செய்யக் கூடிய வகையில் நிதி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. குறித்த திருத்தங்களுக்கு அமைய 2013 ஆம் ஆண்டு இலங்கை துறைமுகங்கள், விமானநிலையங்கள், சுதந்திர வர்த்தக வலயங்களை ஒன்றிணைத்து விசேட சுதந்திர வர்த்தக வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டது.

விசேட சுதந்திர வர்த்தக வலய பகுதிகளில் நடைபெறும் ஏற்றுமதி இறக்குமதி வலயங்களில் நடைபெறும் ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகளை இலங்கை சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாது. உள்ளூர் திணைக்களங்களினால் சோதனையிடவும் முடியாது.

ஆட்சியாளர்கள் சட்டத்தில் போட்டுக் கொடுத்த ஓட்டையைப் பயன்படுத்தித் தான் தம்மிக்க பெரேரா வெளிநாட்டின் குப்பைகளைக் கொண்டுவந்துள்ளார்.

சட்டத்திருத்தம் அமுலுக்கு வந்த 2013 ஆம் ஆண்டில் தான் தம்மிக்க பெரேரா ஹெயிலிஸ் ப்ரீ சோன் நிறுவனத்தையும் ஆரம்பித்திருந்தார். இராஜபக்ச ஆட்சி அதிகாரத்திலிருந்த இந்த காலப்பகுதியில் தம்மிக்க பெரேரா போக்குவரத்து அமைச்சு உட்படப் பல அரசாங்க திணைக்களங்களில் முக்கிய பொறுப்புகளுக்கும் நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் கெசினோ எனப்படும் சூதாட்ட விடுதிகளை நடத்தி பணக்காரரானதன் காரணமாக கெசினோ தம்மிக்க என்று அழைக்கப்படுகின்றார். இராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பாரிய கெசினோ சூதாட்ட மையங்களுக்கு அனுமதி வழங்கும் சட்டங்களும் கொண்டுவரப்பட்டது.

குப்பைகளை மீள் சுழற்சி செய்வதாகவும், மீள் ஏற்றுமதி செய்வதாகவும் கூறியே இறக்குமதி செய்திருக்கின்றார்கள்.

இவை துறைமுகத்தில் சோதனை இடப்பட்டிருக்க வேண்டும். அச்சமயம் துறைமுக அதிகாரசபையின் தலைவராக ஜதேகவின் அமைச்சரும், ரணில் விக்ரமசிங்கவின் உறவினருமான சாகல ரட்ணாயக்கவின் சகோரரர் நியமிக்கப்பட்டிருந்தார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையிலிருந்து சான்றிதழ் பெறாமல் மீள் சுழற்சி நடவடிக்கையில் ஈடுபட முடியாது. அச்சமயத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக இருந்தவர் ஹெயிலிஸ் கம்பனியின் பணிப்பாளராகவும் இருந்தார்.

குப்பைகளை மீள் ஏற்றுமதி செய்வதாக முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் செய்து கட்டு நாயக்கா சுதந்திர ஏற்றுமதி வலயத்தில் களஞ்சிய படுத்தலுக்காக இடத்தை பெற்றுள்ளார்கள். அனுமதி பெற்றுக் கொண்ட தொழில் நடவடிக்கையை முன்னெடுக்கவிட்டாலோ, அனுமதி பெறப்படாத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலோ முதலீட்டுச் சபை ஒப்பந்தத்தை இரத்து செய்து விடும். ஆனால், குப்பைகளை இறக்குமதி செய்து இரண்டு வருடங்களாகத் திறந்த வெளியில் கொட்டி வைத்திருந்தும் முதலீட்டுச் சபை எந்த நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை. இந்த காலப்பகுதிகளில் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் மகன் முதலீட்டுச் சபையின் தலைவராக இருந்தார். இவரும் ரணில் விக்ரமசிங்கவின் உறவினர் ஆவார்.

எனவே, குப்பை கொள்கலன் இறக்குமதி நடவடிக்கை அரசாங்கத்தின் அனுசரணையுடனே திட்டமிட்டு நடந்துள்ளது என்பது தெளிவாகின்றது.

மேலும், குப்பைகளை இங்கிலாந்திலிருந்து ஏற்றுமதி செய்த வெங்கடாட்ஸ் கம்பனி 2017 ஆம் ஆண்டில் தான் பிரித்தானியாவில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த கம்பனியின் உரிமையாளர் வெங்கடேஸ்வரன் முத்துக்குமார் என்பவராவார். இவரின் சகோதரரான சசிகுமார் முத்துக்குமார் என்பவரே ஹெயிலிக்ஸ் ப்ரீ சோன் கம்பனி சார்பாகக் குப்பைகளை இறக்குமதி செய்த சிலோன் மெட்டல் புரோசசிங் கம்பனியின் உரிமையாளர் ஆவார். இந்த கம்பனி தற்சமயம் நட்டத்தில் இயங்கியதால் இழுத்து மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து இந்த கம்பனிகள் குப்பைகளை மோசடியாக இறக்குமதி செய்யும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டுள்ளமை வெளிச்சம்.
அதே போல் கொள்கலன்களை விநியோகம் செய்த இ.ரி.எல் கொழும்பு நிறுவனமான நாட்டின் பிரதமர், சனாதிபதி வரை செல்வாக்கைக் கொண்டிருக்கும் நிறுவனம். மேலும், இலங்கையின் மிகப் பெரிய கடல் மார்க்க சரக்கு பரிமாற்ற கம்பனியான சிறிலங்கா சிப்பிங் கம்பனியை தம்மிக்க பெரேரா 2017 ஆம் ஆண்டில் வாங்கியிருந்தார்.

இப்படியான அரசியல் பின்புலங்கள், மோசடி வழிமுறைகளுடன் குப்பை இறக்குமதி நடந்திருக்குமென்றால் இத்தொழிலில் மிகப்பெரிய பணபுரள்வு இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ள முடியும்.

இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் தொகுதி ஒன்றுக்கு 5 இலட்சம் பவுன்கள் கட்டணமாகப் பெறப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகை பணத்துக்குக் குப்பைகளை ஏற்றுமதி செய்வதற்கான காரணம் என்ன?

செல்வந்த நாடுகள் அவர்கள் நாட்டின் குப்பைகளை முகாமை செய்வதில் பெரும் சவாலை எதிர்நோக்கி இருக்கின்றார்கள். உதாரணமாக பிரித்தானியாவில் வருடாந்தம் 2300 இலட்சம் டொன் குப்பைகள் நிறைகின்றது. இதில் கிட்டத்தட்ட அரைவாசி அளவுக் குப்பைகள் மீள் சுழற்சி செய்யப்படுகின்றது. மிகுதிக் குப்பைகளை நிலத்தில் புதைத்து அல்லது நிலத்தின் மேல் கொட்டி வைப்பதன் மூலம் முகாமை செய்ய வேண்டும். ஆனாயுல், குப்பைத் தொட்டிகளை பாராமரிப்தற்கு ஆகும் செலவுகளையும், சூழல் பிரச்சினைகளையும் கருத்தில் கொள்ளும் போது பணம் கொடுத்து வேறு நாடுகளுக்கு அனுப்பி விடுவது இலாபகரமானது. எனவே தான், நீண்டகாலமாகச் செல்வந்த நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளில் குப்பைகளைக் கொட்டி வருகின்றது.

இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் பிளாஸ்ரிக், தொழிற்சாலை கழிவுகள், இரசாயன கழிவுகள், வீட்டுக் கழிவுகள், வைத்தியசாலை கழிவுகள், மனித உடல் பாகங்கள், கதிர்வீச்சை வெளியிடும் கழிவுகள் என ஆபத்தானதாகும். இந்த கழிகவுளில் நோய் பரப்பும் கிருமிகள் பாதுகாப்பாக உறங்கு நிலையில் இருக்க முடியும். பொருத்தமான வெப்பநிலையும், காலநிலையும் கிடைக்கும் போது இக்கிருமிகளால் பரம்பலடைய முடியும். வைத்தியசாலை கழிவுகளும், இரசாயன ககழிவுகளும் பாரிய சுகாதார கேடுகளை உருவாக்கும்.

ஆபிரிக்காவின் ஐவரி கோஸ்ட், நைஜீரியா, கானா போன்ற நாடுகள் சொல்லி முடிக்க முடியாத வகையில் சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்து வருகின்றன. இதுபோல் அண்மைக்காலமாக கிழக்காசிய, தெற்காசிய நாடுகளுக்கும் குப்பைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
குறிப்பாக பங்களாதேஸ் நாடு இவ்வாறான குப்பைகளால் பெரிதும் பாதிக்கப்படும் நாடாகி இருக்கின்றது. தற்போது கிழக்காசிய நாடுகள் குப்பை இறக்குமதிக்குத் தடை போட்டு வருகின்றன.

இருந்த போதும் செல்வந்த நாடுகள் எம் போன்ற நாடுகளுக்குக் கடன் வழங்கும் போது நிபந்தனைகளை விதித்து சட்டங்களைத் திருத்துவதன் மூலம் அவர்கள் நாட்டுக் குப்பைகளை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு அனுப்பி வைக்க முயல்கின்றார்கள்.

இக்குப்பைகள் இறக்குமதி செய்யப்படுவதற்கு, குப்பைகளிலிருந்து பயன்படுத்தக் கூடிய இரும்பு போன்ற பொருட்களைப் பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்வதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும். இந்த பிரித்தெடுக்கும் வேலைகளை மனிதர்களைப் பயன்படுத்தித் தான் செய்ய முடியும். செல்வந்த நாடுகளில் இந்த வேலையைச் செய்வதற்காகக் கூலி மிக அதிகம். எனவே, பங்களாதேஸ் போன்ற உழைப்புக்கான கூலி குறைந்த நாடுகளுக்குக் குப்பைகளை ஏற்றுமதி செய்து பிரித்தெடுப்பது இலாபகரமானது. இவ்வாறு பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்தாலும், பெருமளவு கழிவுகள் எஞ்சும். இவற்றை ஒன்றும் செய்ய முடியாது.

ஹெயிலிஸ் கம்பனி இங்கிலாந்து வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்பட்ட மெத்தைகளிலிருந்து இரும்பு துண்டுகளைப் பிரித்தெடுத்த ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாகச் சொல்லியுள்ளது.

எனினும், பிரித்தெடுக்கப்படுவதன் பின்னர் எஞ்சும் கழிவுகளை இலங்கையில் தான் கொட்ட வேண்டும். கடந்த சில வருடங்களாக அரசாங்கம் கொழும்பு,கண்டி பகுதிகளிலும், புத்தளம் அருவக்காடு பகுதியிலும் பாரிய குப்பைத் தொட்டிகளை அமைத்து வருகின்றது. இதன் நோக்கம் வெளிநாட்டுக் குப்பைகளை இறக்குமதி செய்து கொட்டுவதற்காகவா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

அண்மையில் ரணில் - மைத்திரி கூட்டரசாங்கம் சிங்கப்பூருடன் செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திலும் உலக நாடுகளிலிருந்து எல்லா வகையான குப்பைகளையும் இலங்கைக்குள் கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் செய்த பின்னர் அரசாங்கத்தைச் சேர்ந்த சில அமைச்சர்கள் ஏற்றுமதி வலயங்களில் களஞ்சிய படுத்தலுக்காக இட ஒதுக்கீடுகளைப் பதிவு செய்து கொண்டுள்ளார்கள்.

எனவே, எதிர்வரும் காலங்களில் இலங்கைக்குள் வெளிநாட்டுக் குப்பைகள் அதிகளவில் கொண்டு வரப்படும் அபாயம் உள்ளது. தற்போதும் கூட சஜீத் , தம்மிக்க பெரேரா இடையிலான சனாதிபதி வேட்பாளராகும் போட்டியின் காரணமாகத் தான் வெளிநாட்டுக் குப்பைகள் கொண்டு வரப்பட்ட விடயம் வெளியே தெரிய வந்துள்ளது. வெளியே தெரியாமல் குப்பைகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம்.

காரணம், இலங்கை பிளாஸ்ரிக் கழிவுகளை அதிகளவில் வெளியேற்றும் முதல் 10 நாடுகளுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், நம் நாடு செல்வந்த நாடுகளின் அளவுக்குக் கழிவுகளை வெளியேற்றும் நாடல்ல. எனவே, வெளிநாடுகளிலிருந்து குப்பைகள் கொண்டு வரப்பட்டிருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

எதை விற்றும் பணம் தேடலாம் என்று சிந்திக்கும் பிரபு வர்க்கத்தினரினதும், வர்த்தகர்களினதும் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல்கட்சிகளைத் தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் அமர்த்தி வருவோமானால், இனிவரும் காலங்களில் ஐவரிகோஸ்ட், கானா நாடுகளைப் போல் குப்பை மேடுகளில் வாழும் அவல நிலை ஏற்படுவதைத் தவிர்க முடியாது.
4:43 PM

புல்மோட்டை கனிய மணல் வளத்தை வெளிநாடுகளுக்கு தாரைவார்க்கும் கூட்டாட்சி #பகுதி 10

by , in
இலங்கைக்கு வருமானத்தை ஈட்டித்தரும் வளங்களையும், பொருளாதார கேந்திர ஸ்தானங்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை கொள்கையாக கொண்டிருக்கிறது ஐதேக. இது தங்கமுட்டையிடும் வாத்தின் வயிற்றை அறுத்து அனைத்து முட்டைகளையும் எடுப்பது போன்ற செயலாகும். கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக ஆட்சியிலிருக்கும் ரணில் - மைத்திரி கூட்டரசாங்கமும் இது போன்று நாட்டின் பொருளாதார வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது.

இப்படியாக அவர்கள் விற்பனை செய்ய முயற்சிக்கும் வளங்களில் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை பகுதியில் கிடைக்கும் கனிய மணல் வளத்தையும் வெளிநாடுக்கு விற்பனை செய்ய முயற்சித்து வருகின்றார்கள்.

திருகோணமலை துறைமுகத்தை போல எமக்கு இயற்கையாகக் கிடைத்திருக்கும் பெரும் வளமே முல்லைத் தீவிலிருந்து திருகோணமலையின் நிலாவெளி வரையிலான கடற்கரை பகுதியில் இருக்கும் கனியமணல் வளமாகும்.  புல்மோட்டை பகுதியிலே  இவ்வளம் செறிந்து காணப்படுகின்றது.

சுமார்  நான்கு கிலோமீற்றர் நீளமான கடற்கரை பிரதேசத்தில் 200 மீற்றர் அகலத்திற்குக் கனிய மணல் செறிந்து காணப்படுகிறது. வங்காள கடலிலிருந்து அலையால் கொண்டு வந்து சேர்க்கப்படும் இக்கனிய மணலை சேகரிக்காவிட்டால்,  மொன்சூன் மழைக் காலத்தில் மீண்டும் கடலுக்கே அலைகளால் எடுத்து செல்லப்படும்.

ஆனால், ஒவ்வொரு வருடமும் வங்காள கடலிலிருந்து  புதிய கனியமணல் வந்து சேர்ந்துவிடும். சுமார் நான்கு மில்லியன் தொன் அளவான கனிய மணல் ஒவ்வொரு வருடமும் கொண்டு வந்து சேர்க்கப்படுகின்றது.

இந்த கனிய மணலில் இல்மனைற் 70%, சேர்கோன் 8%, ரூற்றைல் 8%, மொனசைட் 0.3%, சில்லிமனைட் 1% என உலகின் அரிதான கனிய வளங்கள் காணப்படுகின்றன.

இல்மனைற், ரூற்றைல் ஆகிய கனிமங்களிலிருந்து டைட்டேனியம் எனும் உலோகம் பிரித்தெடுக்கப்படும். டைட்டேனியம் உலகிலேயே விலைக் கூடிய உலோகம் ஆகும். டைட்டேனியம்  விமானம் தயாரிக்கப் பயன்படுகின்றது.  இதன் காரணமாகவே டைட்டேனியம் கறுப்பு தங்கம் என அழைக்கின்றார்கள். உலகிலே  டைட்டேனியம் பெறக் கூடிய உயர்  தரமான கனிய மணல் கிடைப்பது இலங்கையில் தான். மேலும், இக் கனிய மணலில் அடங்கியுள்ள கனிமங்கள் பிளாஸ்ரிக், உலோகம், பீங்கான், கடதாசி, மை, இறப்பர், விமான தயாரிப்பு தொழிற்துறையிலும், மருத்துவ துறையிலும் பயன்படுத்தப்படுகின்றது.

பருவந்தோறும்  புதுப்பிக்கப்படும் வற்றாத கனிய மணல் வளம் இருப்பதானது, அராபிய நாடுகளுக்கு  எண்ணெய் இருப்பது போன்றதாகும். இதன் மூலமே   இலங்கையைச் செல்வந்த நாடாக்க முடியும்.
1992ம் ஆண்டு உருவாக்கப்பட்ட லங்கா கனிய மணல் நிறுவனம் எனும் அரசுக்குச் சொந்தமான கம்பனி மூலம் கனிய மணல் அகழ்ந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றது.  இதன் மூலம் வருடாந்தம் 1500 - 2000 மில்லியன் ரூபாய் இலங்கைக்கு வருமானம் கிடைக்கின்றது.மீண்டும் மீண்டும் இவ்வளம் இயற்கையாக புதுப்பிக்கப்பட்டாலும் சூழலுக்குத் தீங்கில்லாமல் பாதுகாப்பான முறையிலேயே  மணல் அகழ்வு நடந்து வருகின்றது.

எனினும், இலங்கையில் இக் கனிய மணலில் உள்ள கனிமங்கள் பிரித்தெடுக்கப்பட்டு, பெறுமதி சேர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுவதோ, அல்லது உற்பத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படுவதோ இல்லை. மிக குறைந்த விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றது.

எமக்கிருக்கும் இந்த வளத்தை எகோர்ட் எனும் இந்திய கம்பனிக்கு இலவசமாக வழங்கும் அமைச்சரவை பத்திரமொன்று 2016 ஆம் ஆண்டு அமைச்சர் ரிசாட் பதியுதீனால் சமப்பிக்கப்பட்டது. கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் அமைச்சரவை பத்திரத்தை மீள பெற்றுக் கொண்டிருந்தார்கள்.

குறித்த கம்பனிக்கு முதலில் இலவசமாக வழங்கி, அவர்கள் விற்பனை செய்து வருமானம் ஈட்டிய பின் விலையைப் பெற்றுக் கொள்ளும் வகையிலேயே பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், மீண்டும் அதே அமைச்சரினால் அரேபிய நிறுவனம் ஒன்றுக்கு ஒரு கியுப் கனிய மணலை 145 அமெரிக்க டொலருக்கு விற்பனை செய்யும் அமைச்சரவை பத்திரம் ஒன்று தயார் செய்யப்பட்டது.  கட்டிட வேலைகளுக்கு   பயன்
படுத்தப்படும் மணலின் விலை இதை விட அதிகம்.

எமது அரிய வளத்தை வெளிநாடுகளுக்குத் தாரைவார்க்கும் முயற்சிகள் ஒரு புறமிருக்க, இன்னுமொரு புறத்தில் பிரதேச அரசியல்வாதிகளின் பின்புல ஆதரவுடன், சட்டவிரோதமான முறையில் கனியமணல் அகழ்ந்து விற்பனை செய்யப்படுவதும் நடந்து வருகின்றது. இவ்வாறு சட்ட விரோதமாக அகழப்படும் மணல் கிழக்கு கடற்பகுதியில் பன்னாட்டு கம்பனிகளுக்கு சட்ட விரோதமாக விற்கப்படுகின்றது.

இந்த சட்டவிரோத அகழ்வைத் தடுக்கும் வகையில் வேலி அமைக்கச் சென்ற கனிய மணல் கூட்டுத்தாபன அதிகாரிகளைப் பிரதேச அரசியல்வாதிகள் மக்களைத் திரட்டி தாக்கியுள்ளார்கள். பெப்ரவரி  மாதமும், மார்ச் மாதமும் இவ்வாறு அதிகாரிகள் தாக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், இந்த விடயம் மறைக்கப்பட்டு,  காணிகளை அபகரிக்கச் சென்றவர்கள் தாக்கப்பட்டதாகச் செய்தி பரப்பப்பட்டுள்ளது. இது குறித்து பொலிசார் உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. அரசாங்கத்திலிருக்கும் அரசியல்வாதிகளின்  அழுத்தமே இதற்குக் காரணம்.

எமது வளங்கள் எங்கள் அபிவிருத்திக்காக  வினைத்திறனான விதத்தில் பயன்படுத்தப்படாமல் அரசியல் வாதிகளின் சுயநலன்களுக்காக வீணடிக்கப்படுவதும், தாரைவார்க்கப்படுவதும், சுரண்டப்படுவதும் துரதிஸ்ட வசமானதாகும்.

பன்னாட்டு கம்பனிகளுக்கு இந்த வளம் தாரை வார்க்கப்பட்டால், சூழலைப் பற்றிக் கவலைப்படாமல் அளவு கணக்கின்றி  அகழ்ந்து நாசம் செய்து விடுவார்கள்.

சூழலை பற்றி, மக்களை பற்றி, பண்பாடு கலாசாரங்களை பற்றி கவலைப்படாத, இவற்றில் ஏற்படும் தாக்கங்ளால் பாதிக்கப்படாத பிரபு வர்க்கத்தின் நலன்களை முதன்மைபடுத்தி வேலை செய்யும் ஐதேக தொடர்ந்து பொருளாதார, கலாசார, சமூக  மேற்குலகுக்கு தாரை வார்க்கும் கொள்கையை கடைப்பிடித்து வருதின் விளைவே இதுவாகும்.

எனவே, தான் பிரபுவர்க்க நலன்களை மாத்திரம் முதன்மைப்படுத்துபவர்களை அதிகாரத்திலிருந்து அகற்றி சாதாரண மக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்பவர்களை அதிகாரத்தில் அமர்த்துவதற்காக எமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.

இல்லையெனில் புல்மோட்டை கனிய மணலை மாத்திரமல்ல, இதுவரை காலமும் உருவாக்கியுள்ள பாராம்பரியமான அம்சங்களையும், இயற்கையாக பெற்றிருக்கும் வளங்களையும் தாரைவார்க்க நேரிடும்.
6:33 AM

அரச கல்வி மீது திட்டமிட்டு நம்பிக்கையின்மையை உருவாக்கும் ஆட்சியாளர்கள் #பகுதி 09

by , in

எங்களது வீட்டுக்கு வழமையாக வந்த செல்லும் யாரையும், தவிர்க்க வேண்டுமென்றால் அவர்கள் வீட்டுக்கு வரும் போது சரியாக உபசரிக்காமல் விட வேண்டும், கண்டும் காணாமல் விட வேண்டும். காலப்போக்கில் அவர்கள் வருவதை நிறுத்தி விடுவார்கள். 

இதே  தந்திரத்தைத் தான், இலவசக் கல்வியைச் சீரழித்து தனியார் மயப்படுத்துவதற்கும் நம் ரணில் - மைத்திரி மயப்படுத்த பயன்படுத்துகின்றது. ஆட்சியாளர்கள் பாடசாலைகளையும், பல்கலைக்கழகங்களையும் தனியார்மயமாக்கி உள்ளடங்கப் நடைமுறைப்படுத்த எல்லா   திருகுதாளங்களையும் செய்து தோல்வி கண்டிருக்கின்றார்கள்.  மக்களினதும், மாணவர் அமைப்புக்களினதும் கடுமையான எதிர்ப்பு காரணமாகக் கல்வியைத் தனியார்மயமாக்க முடியவில்லை.

எனவே, மக்களை அரச கல்வி நிலையங்கள் மீது நம்பிக்கை இழக்கச் செய்து, தனியார் கல்வி நிலையங்களை நாட செய்யவதன் மூலம், மக்களின் மனநிலையை மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முயற்சி செய்து வருகின்றார்கள்.  கல்வித் துறையில் தனியாரை அனுமதித்தால், பொது போக்குவரத்துத் துறையில் தனியாரை அனுமதித்த பின் அரச போக்குவரத்து சேவைக்கு நடந்ததை விட மோசனமான நிலை இலவச கல்விக்கு ஏற்படும்.

ஏலவே, உயர்தர வகுப்பு கல்விக்காகத் தனியார் வகுப்புகளை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரச பாடசாலைக் கல்வியைச் சீரழிப்பதன் மூலம், மக்களைத் தனியார் பாடசாலைகள் நல்லது எனச் சிந்திக்கும் நிலைக்குத் தள்ள முடியும். 

கூட்டாட்சி அரசாங்கமும் உயர்தர வகுப்பு பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கும் திட்டங்கள் பாடசாலை கல்வியைச் சீரழிக்க ஆரம்பித்துள்ளதைத் தெளிவாக அவதானிக்க முடிகிறது. குறிப்பாக மருத்துவ சேவையையும். மருத்துவ கல்வியையும் தனியார் மயப்படுத்த பகீரத பிரயத்தனம் செய்து வரும் அரசாங்கம், மருத்துவ கல்விக்கான அனுமதிக்கு அடிப்படையான உயர்தர வகுப்பு உயிரியல் பாடத்திலிருந்து அவர்களது கபட திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்கள்.  உயிரியல் பாடத்துக்கு என்ன நடந்தது என்பதைப் பார்த்தால் இனி குறித்துச் போவது தெளிவாகப் புரியும்.

2015 இல் ரணில் - மைத்திரி கூட்டாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டவுடன், 2016 டிசம்பர் மாதம் சாதாரண வழித்தேன் பரீட்சைக்குத் தோற்றி, 2017  ஏப்ரல் மாதத்தில் உயர்தர வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தது.

ஆனால், 2017 மே மாதம் உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போது எந்த பாடத்திட்ட உள்ளடக்கமும் வழங்கப்பட்டிருக்கவில்லை. புதிய பாடத்திட்டங்களில் உள்ளடங்க போகும் அலகுகளின் தலைப்புகள் என்ன என்ற விடயம் மாத்திரமே வழங்கப்பட்டிருந்தது. அலகுகளின் உபதலைப்புகள் என்ன என்பது கூட கொடுக்கப்பட்டிருக்கவில்லை. ஆசிரியர்களுக்கான பயிற்சிகளோ, வளநூல்களோ வழங்கப்பட்டிருக்கவில்லை.

வகுப்புகள் ஆரம்பித்த பின்னர் தேசிய கல்வி நிறுவனம் ஆங்கில மொழியில் மாத்திரம் சில அலகுகளுக்கு மாத்திரம் பாடத்திட்டத்தை இணையத்தில் தரவேற்றியது. அதுவும் 2018 ஜனவரி மாதமளவில் வெறும் 5 அலகுகளின் பாடத்திட்டம் மாத்திரம் இணையத்தில் தரவேற்றியிருந்தது. இவையும் அடிக்கடி மாற்றப்பட்டது. சில அலகுகளுக்கான பாடத்திட்டம் 6 தடவைகள் வரை மாற்றத்துக்குள்ளானது. இவை எதுவும் சிங்களத்திலும், தமிழிலும் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

2018 ஆம் ஆண்டில் முதல் அலகுக்கு மாத்திரமே பாடத்திட்டம் வெளியிடப்பட்டிருந்தது. ஏனைய அலகுகளுக்குத் தமிழ், சிங்கள மொழி மூல உத்தியோகப்பூர்வமான பாடத்திட்டங்கள் வெளியிடப்படவில்லை. தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றைத் தனிப்பட்ட முறையில் வெளியிட்டிருந்தார். எனினும், அதில் ஏராளமாகப் பிழைகள் இருந்தன. 

2019 ஆகஸ்ட்டில் பரீட்சை எழுதவிருந்த மாணவர்களுக்கு, மே மாதத்தின் பின்னர் தான் பாடத்திட்டங்களும், வளநூல்களும் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டன. வழமையாக ஏப்ரல் மாதத்தின் பின்னர் பாடத்திட்டங்கள் படிப்பிக்கப்பட்டு மீட்டல் வகுப்புகள் ஆரம்பமாகிவிடும். ஆனால், 8 அலகுகளுக்கான பாடத்திட்டங்கள், வளநூல்கள் மே மாதத்துக்குப் பின்னர் தான் வழங்கப்பட்டது. 

உயிரியல் பாடத்தின் பத்தாவது அலகுகளுக்கான பாடத்திட்டம் வெளியிடப்படவே இல்லை. கடைசியில் கல்வி அமைச்சு 10வது அலகிலிருந்து பரீட்சையில் கேள்விகள் வராது என சுற்று நிரூபம்( இல. 23/2019) வெளியிட்டது.

ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டம் தொடர்பான கருத்தரங்குகள் நடத்தப்படவில்லை. உயிரியல் பாடத்திட்டம் கெம்பல் என்பவரின் பயோலோஜி எனும் ஆங்கில நூலின் 10வது பதிப்பை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகக் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது. ஆனால்,  அந்த நூலின் 11வது பதிப்பும் வெளிவந்து விட்டது. கடைகளில் 11வது பதிப்பே கிடைக்கின்றது. 10வது பதிப்புக்கும், 11வது பதிப்புக்கும் இடையில் குறிப்பிடத்தக்க அளவில் வேறுபாடுகள் உள்ளது. இந்த நூலின் விலை 20000 ரூபாய் ஆகும்.

4 வருடகாலமாக இழுத்தடிக்கப்பட்டும் பகுதி பகுதியாக வழங்கப்பட்ட பாடத்திட்டங்களிலும், நூற்றுக்கணக்கான பிழைகள் இருக்கின்றன.
உதாரணமாக…  மனிதனின் குருதி சுற்றோட்ட தொகுதியில் சுவாசப்பையிலிருந்து  இதயத்தின் இடதுபக்க சோனையறைக்கு நான்கு நாளங்களின் மூலம் குருதி கொண்டுவரப்படும். ஆனால், அரசின் பாடத்திட்ட நூல்களில் இது இரண்டு நாளங்கள் மூலம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எயிட்ஸ் நோயின் அறிகுறிகள் என சிபிலசு நோயின் அறிகுறிகள் தரப்பட்டுள்ளது. சிபிலசு நோய் வந்த யாரும் எயிட்ஸ் நோய் வந்திருப்பதாக தான் நினைப்பர்.

இலங்கையில் பாலைவனங்கள் இல்லை. எனவே, பாலைவனங்கள் தொடர்பாக மாணவர்கள் புத்தகங்களிலிருந்து தான் படிக்க முடியும். உயிரியல் பாடத்திட்டத்தில் பாலை வனங்கள் 3000 மில்லிமீற்றருக்கும் குறைவான மழைவீழ்ச்சியை பெரும் பிரதேசங்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால், இலங்கையில் 2000 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பெரும் இடங்களே ஈரவலய பிரதேசம் எனப்படும்.

மேலும் பாலைவனங்கள் ஆழமான கிணறுகளும், நீரை கடத்தும் தொகுதிகளும் விருத்தி செய்யப்படுவதால், மனித குடியேற்றங்கள் நடந்து வருவதாகச் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், உலகில் அப்படி நடப்பதில்லை. கடாபியின் ஆட்சிக்காலத்தில் லிபியாவில் இப்படியான ஒரு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பாலைவன பிரதேசம் ஒன்றில் பூமியை மிக ஆழமாகத் துளைத்தும், கால்வாய்கள் மூலமும் நீரைப் பெற்றும், குளிரூட்டப்பட்ட வீடுகளை அமைத்தும் நகர் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், இன்று அந்த நகர் இல்லை. இது மிகச் செலவு கூடிய நடவடிக்கை ஆகும். ஆனால், உலகில் இது பரவலாக நடப்பது போல் பாடத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரில் பாடத்தின் அடிப்படை தெரிந்தவர்கள் கூட நூற்றுக் கணக்கான பிழைகளைக் கண்டுபிடிக்க முடிகிறது. துறைசார் நிபுணர்கள் பக்கத்துக்குப் பக்கம் பிழைகளை இனம் காண்கின்றார்கள்.

இது குறித்து பாராளுமன்றத்திலும், கல்வி அமைச்சரிடமும் கேள்விகள் எழுப்பப்பட்ட போதும் உதாசீனமான பதில்கள் தான் வழங்கப்பட்டது. உயர்தரம் உயிரியல் பாடம் கற்பிக்கும் 350 ஆசிரியர்கள் கையொப்பம் இட்டு இந்த விடயம் குறித்து சந்திப்பு கூட்டம் ஒன்றை நடத்துமாறு கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விட்டிருந்தார்கள். ஆனால், கல்வி அமைச்சர் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், கல்வியைத் தனியார் மயமாக்கும் சட்டங்களைக் கொண்டு வருவதில் அதிக முனைப்புடன் செயல்படுகின்றது அரசாங்கம். உயர்தரம் சித்தியடையும் மாணவர்களை அரச பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்க வேண்டும் என்ற சட்டத்திலும் மாற்றம் கொண்டு வர முயல்கிறது அரசாங்கம். 

கல்வியையும், வைத்திய சேவைகளையும் தனியார் மயமாக்கும் முயற்சிகளைச் செய்து கொண்டே, இன்னுமொரு புறம் பாடசாலைக் கல்வியைச் சீர்குலைப்பதானது மக்களை தனியார்மயமாக்கல் நோக்கி வலுக்கட்டாயமாகத் தள்ளி விடும் வேலையாகும். 

ஐதேகவோ, கல்வியைத் தனியார் மயமாக்கி முதலாளி வர்க்கத்துக்கு இலாபம் தேட வழித்தேடி கொடுக்க கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்களோ அதிகாரத்துக்கு வந்தால் சாதாரண மக்களும் உரிமையாகப் பெறும் கல்வியைக் காசுக் கொடுத்துப் பெறவேண்டிய வரப்பிரசாதமாக மாற்றிவிடுவார்கள்.

7:24 AM

பின்கதவால் உயர்கல்வியை வியாபாரமாக்க முயலும் கூட்டாட்சி #பகுதி-08

by , in


இதுவரை ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் அனைத்தும் பொதுத்துறைகளைத் தனியார் மயமாக்க முயற்சி செய்திருந்தார்கள். அதில் கல்வித்துறையும், சுகாதார சேவையும் முக்கிய துறைகளாக இருந்தன.

கல்வியை பொருத்தவரை மிகக் குறைந்த முதலீட்டில் அதிக இலாபம் பெறக் கூடிய துறையாகும். ஆனால், சகலதையும் விற்பனை செய்தல், நுகர்தல் என்ற அடிப்படையில் மக்களுக்குக் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருக்கும் உலக முதலாளி வர்க்கத்தால் கல்வியை எல்லா இடங்களிலும் வியாபாரமாக்க முடிந்ததில்லை.

சமவுடைமை சோவியத் அரசின் கீழ் பொதுக்கல்வி அரசால் வழங்கப்படும் நலன்புரி சேவையாக முன்னெடுக்கப்பட்டதன் சாதகமான விளைவுகளினால் உலக கூடிக் குறைந்த அளவில் அரசால் வழங்கப்படும் இலவச கல்வியை நடைமுறைப் படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின் அரசு உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வேலையையும், நீதி பரிபாலனத்தையும் கவனித்துக் கொண்டு, ஏனைய அனைத்து துறைகளையும் முதலாளி வர்க்கத்தினர் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற தாராளமய கொள்கை திணிக்கப்பட்டு வருகின்றது.

உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மூலம் கடன் வழங்கல், நிதி வழங்கல் திட்டங்களின் போது கல்வியை தனியார்மயமாக்குவதை நிபந்தனையாக முன்வைத்து வருகின்றார்கள்.

இலங்கையில் 1985 ஆம் ஆண்டு ஐதேக ஆட்சியில் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் மேற்கொண்ட தனியார் நிறுவனங்கள் பட்டப்படிப்பு கல்வி நிறுவனங்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டது.

அதற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் அனைவரும் கல்வியை தனியார் மயமாக்க முயற்சி செய்தார்கள். எனினும், மாணவர் அமைப்புக்கள் கல்வி தனியார் மயமாக்கலை எதிர்த்துப் போராடி வருவதால் நினைத்தபடி காரியம் சாதித்துக் கொள்ள முடியவில்லை.

தனியார் மயமாக்கலை ஊக்கவிக்கும் முயற்சி நடந்த போதெல்லாம் மாணவர் கடுமையான எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். இது வரை ஏராளமான மாணவர்கள் இந்த போராட்டங்களில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

பிரேமதாச காலத்தில் மாணவர் சங்கத் தலைவர்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்டார்கள். இன்றும் பேராதனை பல்கலைக்கழக விடுதிகளுக்குப் படுகொலை செய்யப்பட்ட மாணவர் ஒன்றிய தலைவர்களின் பெயர்கள் (நிஸ்மி ஹொல், ரஞ்சிதம் ஹொல்) சூட்டப்பட்டிருப்பதையும், தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் உயிர்த்தியாகம் செய்த மாணவர்களின் நினைவுச்சின்னங்கள் இருப்பதையும் காணலாம். மாணவர்களின் எதிர்ப்பு காரணமாக இது வரை உயர் கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடையவில்லை.

ஆனால், ஐக்கிய தேசிய கட்சித் தலைமையிலான கூட்டாட்சி அரசாங்கம் தந்திரமான முறையில் உயர் கல்வியைத் தனியார் மயமாக்கும் சட்டத்திருத்தங்களைச் செய்ய முயற்சி செய்கின்றது.

இந்த முயற்சியில் ஒரு கட்டமாக கடந்த சூன் மாதம் ;உயர்கல்வி - தரப்படுத்தல் மற்றும் அங்கீகாரம்’ சட்ட மூலத்தை அமைச்சரவையின் அனுமதியுடன் வர்த்தமானியில் வெளியிட்டிருந்தார்கள். ஐதேக கட்சி வெற்றிபெற்றால் இந்த சட்டமூலம் சட்டமாக நிறைவேற்றப்படும்.

இலங்கையின் குறித்த ஒரு துறைசார் தொழில்முறையாளர்களின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பது, அவ் அவ் துறைசார் தொழில் நிபுணர்களின் சட்ட ரீதியிலான அமைப்புகளினால் ஆகும்.

உதாரணமாக இலங்கையின் வைத்திய தொழிலின் தரபிரமானம் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்ற தரபிரமானங்களை நிர்ணயிப்பது இலங்கை வைத்திய சங்கமாகும். இச்சங்கம் 1929 ஆம் ஆண்டு வைத்திய கட்டளைச் சட்டத்தினால் ஸ்தாபிக்கப்பட்டதாகும். இச்சங்கமே வைத்தியர்களைப் பதிவு செய்வது, வைத்தியர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுப்பது, மருத்துவ பட்டப்படிப்பை அங்கீகரிப்பது போன்றவற்றை முடிவு செய்யும்

இது போலவே கட்டிட கலைஞர்கள் தொடர்பாக இலங்கை கட்டிட நிர்மாண நிறுவனமும், பொறியியலாளர்கள் தொடர்பாக இலங்கை பொறியியல் துறை நிறுவனமும் ஆயுர்வேத வைத்திய சங்கத்தால் ஆயுர்வேத வைத்தியர்கள் தொடர்பாகவும் தரநிர்ணயங்கள் செய்யப்படும்.

கடந்த காலங்களில் தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்பட்ட போதெல்லாம் இந்த தொழில்துறைசார் அமைப்புகளின் அங்கீகாரத்தைப் பெற முடியவில்லை.

உதாரணமாக அரசாங்கத்தின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்ட சைட்டம் மருத்துவ படிப்பு பல்கலைக்கழகத்தை அங்கீகரிக்க மறுத்திருந்தது. இலங்கை பொறியியல் துறை அமைப்புகளால் பேராதனை, மொரட்டுவ, ருகுனு பல்கலைக்கழக பொறியியல் பட்டப்படிப்பை மாத்திரமே இதுவரை அங்கீகரித்துள்ளது. வேறெந்த தனியார் நிறுவனங்கள் வழங்கும் பொறியியல் பட்டத்தையும் அங்கீகரிக்கவில்லை.

இந்த துறைசார் நிபுணர்களின் சங்கங்கள் அத்துறையிலிருப்பவர்களின் வாக்களிப்பினால் அமைக்கப்படுவதாகும். துறைக்குப் பொறுப்பான அமைச்சரினால் மிகச்சிறிய எண்ணிக்கையில் பிரதிநிதிகளை தெரிவு செய்ய முடியும்.

முதலில், அமைச்சர்கள் தமக்குச் சார்பானவர்களைச் சங்க நிர்வாக குழுக்களுக்கு நியமித்து தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களுக்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ள முனைந்தார்கள். ஆனால், அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களும் தரம் குறைந்த தனியார் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கவில்லை.

பின்னர் அமைச்சர்களின் கையாள்களை நியமித்து சங்கத்தின் செயல்பாடுகளை குழுப்ப முனைந்தார்கள். உதாரணமாகச் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அவரது கையாளான கொல்வின் குணரத்ன இலங்கை வைத்திய சபைக்கு தலைவராக நியமித்திருந்தார், கொல்வின் குணரத்ன சிறிது காலத்தில் வைத்திய சபையிலிருந்து விலகி, இச்சபை ஒழுங்காக வேலை செய்யவில்லை, கலைக்கப்பட வேண்டும் எனச் சொல்லி வந்தார். இதன் பின்னர் அரசாங்க தரப்பும் வைத்திய சபையைக் கலைக்க வேண்டும் எனச் சொல்லி வந்தார்கள்.

ஆனால், கூட்டாட்சி அரசாங்கத்தின் அனைத்து உள்ளடி வேலைகளும் முறியடிக்கப்பட்டது.

எனவே, இந்த சங்கங்களின் அதிகாரங்களை ஒழித்துக் கட்டும் வகையில், உயர்கல்வி - தரப்படுத்தல் மற்றும் அங்கீகார ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் சட்டத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கின்றார்கள்.

இதன் மூலம் தொழில்துறைகளின் தரத்தை நிர்ணயம் செய்யும் அங்கீகாரம் செய்யும் அதிகாரங்களைப் பறித்துத் தரப்படுத்தல் மற்றும் அங்கீகார ஆணைக்குழுவுக்கு வழங்கப்படும். இதுவரை தொழில் நிபுணர் சங்கங்களில் தமக்கு சார்பானவர்களை நியமித்தும், அச்சங்களின் செயல்பாட்டு வியூகங்களில் ஊடுருவியும், சங்கங்களை இல்லாதொழித்தும் செய்ய நினைத்த எதுவும் கைகூடாத நிலையில் ஐதேக தலைமையிலான கூட்டாட்சி பின்கதவால் தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை அமைக்க இருக்கும் தடையை உடைக்க முனைகிறது.

புதிதாக ஸ்தாபிக்க்படவுள்ள ஆணைக்குழுவுக்கு உயர்கல்வி அமைச்சர், நிதி அமைச்சர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், தேசிய ஆணைக்குழுவின் தவிசாளர் ஆகியோ முன்மொழியும் தலா ஒவ்வொருவரை கொண்ட பதவி வழி உத்தியோகஸ்தர்கள் நியமிக்கப்படுவார்கள்.

மேலும், கல்வி அமைச்சர் முன்மொழியும் 15 பேரிலிருந்து சனாதிபதியினால், 9 உறுப்பினர்கள் ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்படுவார்கள்.

பதவி வழி நியமிக்கப்படும் நான்குபேரைத் தவிர மிகுதியானவர்களின்; தகுதிகள், தராதரங்கள் தொடர்பாக எந்த விடயமும் குறிப்பிடப்படவில்லை. ஆணைக்குழுவில் அரசியல்வாதிகளினால் நியமிக்கப்படுவர்களே அதிகமாகும்.

இதுவரையும் வைத்திய துறை தொடர்பான தரநியமனம் செய்தவர்கள் வைத்தியர்கள் மாத்திரமே. ஏனைய துறைக்கும் அத்துறை சார்ந்தவர்களே தரநிர்ணயங்களை வகுத்தார்கள். ஆனால், புதிய ஆணைக்குழு மூலம் அத்துறைசாராத அரசியல்வாதிகளின் கையாள்கள் தரநிர்ணயம் செய்யும் அவலமான நிலை உருவாகும்.

மேலும், முன்வைக்கப்பட்ட சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால், பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவும் அதிகாரம் அற்றதாக மாறும். உதாரணமாக மானியங்கள் ஆணைக்குழு ஏதேனும் புதிய பாடநெறிகளை, புதிய பீடங்களை உருவாக்கும் போது, உத்தேச தரப்படுத்தல் மற்றும் அங்கீகார ஆணைக்குழுவினால் அனுமதி மறுக்கப்படலாம். தரமற்ற தனியார் மருத்துவக் கல்லூரிகளை உத்தேச ஆணைக்குழு அரசியல்வாதிகளின் பணிப்புக்கு அமைய அங்கீகரிக்கும் நிலை உருவாகும்.

முன்வைக்கப்பட்டுள்ள சட்ட மூலத்தை வரி வரியாக ஆராய்ந்தால் இலங்கையின் நிபுணத்துவ தொழில்துறையின் தரம் வீழ்ச்சியடைந்து அதிபயங்கரமான சீரழிவு ஏற்படப் போவதை உணரலாம். வரிவரியாக ஆராயாமல் கடந்த கால அனுபவங்கள் இரண்டை சொல்வதன் மூலம் அந்த அவலத்தை உணர வைக்க முடியும்.

சுகாதார அமைச்சர் இராஜித்த சேனாரத்தனவின் திட்டத்தின் படி மருந்துகளின் தரத்தைப் பாதுகாக்கும் அதிகார சபை ஒன்றை அமைத்தார்கள். ஆனால், அதிகார சபையின் தலைவர், பணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த பேராசிரியர்கள் லாலஜெயக்கொடி, கிசாந்த விஜேசூரிய ஆகியோர் தரமற்ற மருந்துகளைப் பாவனைக்கு அனுமதிக்க மறுப்பு தெரிவித்ததால் அமைச்சரினால் பதவி இராஜனமா செய்ய வைக்கப்பட்டார்கள். பின்னர்,இராவுத்த சேனாரத்தன தான் சொல்வதைச் செய்யக் கூடியவர்களை அதிகார சபைக்கு நியமித்திருந்தார். இதன் பின்னரே கர்ப்பிணி தாய்மார்களுக்குக் காலாவதியாகிய போலிக் எனப்படும் மருந்து வழங்கப்பட்ட சம்பவங்கள் நடந்தது. சிறுநீரக கல் நோயாளர்களுக்குத் தரம் குறைந்த மருந்துகள் வழங்கப்பட்டது.

புற்றுநோய் சிகிச்சைக்காக இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளுக்குப் பதிலாக ஆசியாவிலிருந்து தரம் குறைந்த மருந்துகள் இறக்குமதி செய்யத் தீர்மானிக்கப்பட்டது.

இது போல் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை நடத்தும் நெவில் பெர்னான்டோ தனக்குச் சொந்தமான நெவில் பெர்னான்டோ தனியார் வைத்தியசாலையை அனுமதி பெறாமல் போதனா வைத்தியசாலை எனப் பெயரிட்டு நடத்தி வந்தார். இந்த வைத்தியசாலையில் கடந்த காலங்களில் இறந்த உடலுக்கு வைத்தியம் பார்த்த சம்பவங்களும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உடல் பயிற்சிகள் வழங்கியதால் மரணமடைந்த சம்பவங்கள் நடந்து. அதுபோலவே கூட்டாட்சி அரசாங்கம் உருவாக முக்கிய பங்களிப்பு வழங்கிய சோபித தேரர் இந்த வைத்தியசாலையினால் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையினால் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படுகின்றது.

இந்த வைத்தியசாலையையும், சைட்டம் தனியார் மருத்துவ கல்வியையும் இலங்கை வைத்திய சங்கம் அங்கீகரிக்கவில்லை. அரசியல்வாதிகளின் அனுசரணையில் தான் இது வரை இயங்கி வந்தது. எனினும் வைத்திய சங்கத்தினதும், மாணவர் அமைப்புகளினதும் எதிர்ப்பு காரணமாக மூடப்பட்டது.

உத்தேச தரப்படுத்தல் மற்றும் அங்கீகார ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டால் இது போன்ற தரமற்ற கல்லூரிகள், வைத்தியசாலைகள் அங்கீகாரத்தைப் பெறும். இது எத்தகைய சீரழிவைத் தரும் என்பதை இந்தியாவில் நடந்திருப்பதை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

பிரபு வர்க்கத்தினதும், செல்வந்தர்களினதும் நலன்களை மட்டும் முன்னிலைப்படுத்தும் ஐதேக அதிகாரத்துக்கு வந்தால் எதிர்காலத்தில் இந்த அவலங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது.

நல்லாட்சி, சனநாயகம் போன்ற ஏமாற்று பிரச்சாரங்களைச் செய்தும், மக்களுக்குச் சலுகைகளை வழங்கியும், தந்திரமான வழியில் மக்களைச் சீரழிவுக்குத் தள்ளி பிரபு வர்க்கத்தின் நலன்களை மாத்திரம் கவனிப்பார்கள்.

நோய் வந்தால் சாதாரண மக்கள் இவர்கள் நடத்தும் தரம் குறைந்த மருத்துவ சேவையைத் தான் பெற வேண்டும். இவர்களோ சிங்கப்பூரில் சென்று நல்ல சிகிச்சை பெறுவார்கள். இந்த நிலை வர வேண்டுமா??

Post Top Ad

My Instagram